சிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடல்
Recommended Video
சென்னை: சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.
அப்போது ஏராளமானோர் மீது காயம் ஏற்பட்டது. 2000-க்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தடியடியை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசியக் கொடிகளை சிறுவர்களும் பெண்களும் கையில் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.