நீட் ஜேஇஇ தேர்வு... நடத்த முடியாது... பிரதமரிடம் முதல்வர்கள் கூற வேண்டும்... சுப்ரமணியன் சுவாமி!!
சென்னை: இன்றைய நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் மாணவர்கள் திரௌபதிகளாக உள்ளனர். மாநில முதல்வர்கள் கிருஷ்ணராக இருந்து அவர்களை காப்பாற்ற முன் வரவேண்டும். தேர்வுகளை நடத்த முடியாது என்று பிரதமருக்கு மாநில முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து வருகிறார். இந்தத் தேர்வுகளை தற்போது நடத்துவது நாட்டில் இருக்கும் பணக்கார பெற்றோர்களின் குழந்தைகளுக்குத்தான் உதவுவதாக இருக்கும். ஏழை மாணவர்களுக்கு உதவாது என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். மேலும், தற்போது இன்டர்நெட் சேவை மோசமாக இருப்பதாகவும், கிராமங்களில் இன்னும் இந்த வசதி இல்லை என்றும், நூலகங்கள் மூடி இருப்பதால், படிக்க முடியாமல் ஏழை மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தேர்வு நடத்தாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ஐஐடி பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது பொது முடக்கத்தினால் நாட்டில் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக நாம் பிரதமர் மோடியை குற்றம்சுமத்த முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் அவரது சமீபத்திய ட்விட்டர் பதிவுகளில், ''நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் மாணவர்கள் திரௌபதிகளாக உள்ளனர். மாநில முதல்வர்கள் கிருஷ்ணராக இருந்து அவர்களை காப்பாற்ற முன் வரவேண்டும். மாணவன் மற்றும் எனது 60 ஆண்டுகால பேராசிரியர் பணி அனுபவத்தில் கூறுகிறேன், தவறான ஒன்று இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நான் தற்போது விதுரனைப் போல உணருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மற்றொரு பதிவில், ''அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பரீட்சை மையங்களுக்கும், பின்னர் தேர்வு முடிந்து அவர்களது வீடுகளுக்கும் திரும்பிச் செல்வதற்கு முதல்வர்கள் உத்தரவாதம் அளிப்பார்களா? அவ்வாறு செய்ய முடியாது என்ற பட்சத்தில், பகிரங்கமாக தேர்வை நடத்த முடியாது என்று பிரதமரிடம் முதல்வர்கள் கூற வேண்டும். ஆனால், அவர்களால் அவ்வாறு பேச முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நீட் தேர்வு நடத்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி