ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு மற்றும் பலர்.. ஆஹா காங்கிரஸ்.. அடேங்கப்பா பிளான்!
சென்னை: தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்சம் கூட கோஷ்டி பூசல் வெடித்துவிடக் கூடாது என்பதில் பார்த்து பார்த்து கவனம் செலுத்தி வருகிறது அக்கட்சி தேசிய தலைமை.
இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு இதை அப்பட்டமாக உணர்த்துகிறது. "நீங்க ஏன் சும்மா போறீங்க.. இந்தாங்க வாங்கிக்கோங்க" என்று கூவிக் கூவி, கோஷ்டி முன்னணி தலைவர்களுக்கு பதவிகளை வாரி வழங்கி குஷிப்படுத்தியுள்ளது காங்கிரஸ் தலைமை.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரை அப்பதவியிலிருந்து தூக்கியடித்து சில தினங்கள் முன்பாக ஷாக் கொடுத்தார், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி.
கோஷ்டி பூசல்கள்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளராக அறியப்படுபவராகும். பீட்டர் அல்போஸ்தான், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என யூகங்கள் நிலவிவந்த நிலையில், அழகிரியின் நியமனம் கட்சிக்குள் உள்ள சில கோஷ்டிகளுக்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிருப்தி கோஷ்டி
இயல்பாகவே, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டியினர், இதனால் அதிருப்தியடைந்ததாக தகவல் வெளியானது. ராகுல் காந்தி எதைச் செய்தாலும் ஏற்பேன் என திருநாவுக்கரசர் கூறியிருந்தாலும், அதிருப்தி என்னவோ உள்ளூர இருந்ததாகவே கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில்தான், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் பணிக்குழுக்களை நியமித்து தலைமை இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், அனைத்து கோஷ்டியினருக்கும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எல்லா முக்கிய தலைவர்களுமே இக்குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர். அதிலும், முக்கியத்துவம் வாய்ந்த, ஒருங்கிணைப்பு குழு கமிட்டி தலைவர் பதவி, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தந்து அழகு பார்க்கப்பட்டுள்ளது.
ஓடியாங்க, ஓடியாங்க
பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, குஷ்பு, விஜயதாரணி, ஜோதிமணி என யாரெல்லாம் தமிழக காங்கிரசில் பிரபலமோ அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு கமிட்டியில் பொறுப்பை கொடுத்து, குஷிப்படுத்தியுள்ளது தலைமை. இதன் மூலம், "தேர்தல் நேரத்தில் ஒருத்தருக்கொருத்தர் உரசிக்கொள்ளாமல், அவுங்கவுங்க வேலையை பார்க்கவும்" என்ற சேதி, மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது.
ஜாதி பிரதிநிதித்துவம்
ஏற்கனவே, காங்கிரஸ் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு முக்கியமான ஜாதி பிரிவினருக்கும் ஒரு பிரதிநிதித்துவம் என்பதை போல இந்த நியமனம் இருந்தது. இன்று மோகன் குமாரமங்கலம் மற்றொரு செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல தேர்தல் குழுவிலும் அனைத்து கோஷ்டிக்கும் பதவி தரப்பட்டுள்ளது. ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்.