ஊரடங்கு கால புதிய நெறிமுறைகள்... லாரிகள் இயங்கலாம்.. காரில் 2 பேர்.. டூவீலரில் ஒருவர் பயணிக்கலாம்
சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை மட்டும் பட்டியலிட்டு அதன் விவரங்களை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதி முதல் சரக்கு வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை லாரிகள் இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சரக்கு லாரிகளில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே செல்வதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதில் மற்றபடி ஆட்களை ஏற்றிச்செல்லவோ, கூடுதல் நபர்கள் இருக்கவோ அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையோர மோட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உரிய வழிமுறைகளை பின்பற்றி சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க முடியாத மோசமான அரசு என்கிற கேவலத்தை மறைக்க டிராமா போடும் டிரம்ப்
மேலும், அவசிய காரணத்திற்காக பயணம் செய்வதாக இருந்தால் காரில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். முன் இருக்கையில் ஓட்டுநரும் பின் இருக்கையில் ஒருவரும் மட்டும் அமர்ந்து செல்லலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இரண்டு சக்கர வாகனத்தை பொறுத்தவரை ஒருவர் மட்டுமே செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், லாரி பழுதுபார்க்கும் மெக்கானிக் கடைகளை திறந்துகொள்ள ஏப்ரல் 20 முதல் அனுமதி அளித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த வாரம் நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சரக்கு லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுவதாகவும் பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் அதனை குறிப்பெடுத்துக்கொண்ட பிரதமர் ஊரடங்கு கால புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் சரக்கு வாகனங்களை இயக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளார்.