நிவர் எப்படிப்பட்டது? அதிகம் பாதிக்க போகும் மாவட்டம் எது?.. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
சென்னை: நிவர் புயல் காரணமாக எந்தெந்த மாவட்டங்கள் எல்லாம் அதிகம் பாதிக்கும், இந்த புயலின் தாக்கம், குணாதிசயம் எப்படி இருக்கும் என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தற்போது மழை புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.
அதேபோல் வடதமிழகம் முழுக்கவும், கடலோர மாவட்டங்களிலும் புயல் காரணமாக காற்றும், பேய் மழையும் பெய்து கொண்டு இருக்கிறது.
மழை எப்படி
இந்த புயல் தற்போது பெரிய அளவில் வேகம் எடுக்கவில்லை. மிகவும் மெதுவாகவே நகர்ந்து வருகிறது. அதனால்தான் இன்னும் இந்த புயல் சென்னையில் இருந்து 350 கிமீ தூரத்திலேயே உள்ளது. ஆனால் நினைத்ததை விட இந்த புயல் வலிமையாக இருக்கிறது.
வலிமை
இந்த புயல் செல்லும் பாதை குழப்பமாக இருந்தாலும் இதன் வேகத்தில் மாற்றம் இருக்காது என்கிறார்கள். 145 கிமீ வேகத்தில் கூட இந்த புயல் செல்லும். அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் கூட இந்த புயல் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் 10 மணி நேரங்களில் இது அதி தீவிர புயலாக மாறும்.
கணிப்பு
இந்த புயல் குறித்து கணிக்க முடியாத விஷயங்கள் என்று பார்த்தால் அதில் ஒன்று இந்த புயல் செல்லும் பாதை, இன்னொன்று அது கரையை கடக்க போகும் நேரம். இந்த புயல் இடையில் எங்காவது நின்று, ஓய்வு எடுத்துவிட்டு பின் மீண்டும் நகர கூட வாய்ப்புள்ளது. இதனால்தான் புயல் கரையை கடக்கும் நேரம் இன்று இரவா அல்லது நாளை காலையா என்று உறுதியாக கூற முடியவில்லை.
எங்கே தாக்கும்
இந்த புயல் காரணமாக இரண்டு 2 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கும். சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அதிகம் இதனால் பாதிக்க போகிறது. இந்த புயல் மஹாபலிபுரம், கலப்பாக்கம் அருகே அல்லது சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கும் என்பதால் இந்த மாவட்டங்கள் இதனால் அதிகம் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை
அதிலும் சென்னையின் பாதிப்பு கூடுதலாக இருக்கும். இதனால் இங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கல்பாக்கம், மஹாபலிபுரம் நேரடியாக பாதிக்க வாய்ப்புள்ளதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிகாலை
இந்த புயல் ஒருவேளை அதிகாலையில் கரையை கடந்தால் சேதம் அதிகமாக இருக்கும். சாதாரண நேரத்தில் இருக்கும் சேதத்தை விட அதிகாலையில் சேதம் அதிகமாக இருக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.