அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு, அதிமுக நடந்து கொண்ட விதத்தால் கடும் அதிருப்தியில் உள்ளனராம், கூட்டணி கட்சியினர். எனவே 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களின்போது அதிமுகவுக்கு பெரும் அக்னி பரிட்சை காத்திருப்பதாக கூறப்படுகிறது.
நீங்கள் ஒன்றை கவனித்திருப்பீர்கள். லோக்சபா தேர்தல் முடிந்ததும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்து திரும்பினர்.
சிறப்பாக களமிறங்கி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வந்தோம் என ஒவ்வொரு கூட்டணி கட்சி தலைவரும் சொல்லாமல் அறிவாலயத்தை விட்டு திரும்பியதில்லை.
பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்
திமுக கூட்டணி
இந்த சந்திப்புகளின்போது வெறும் நன்றி தெரிவிப்பு மட்டுமல்லாது, சில தொகுதிகளில் திமுகவினர் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குமுறல்களும் வெளிப்பட்டதாம். ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் தங்களுக்கு திமுக நிர்வாகிகளின் பணியால் திருப்தி கிடைத்தது என்றுதான் சொல்லித் திரும்பியுள்ளனர். மேலும், ஒட்டப்பிடாரம் உட்பட மே 19ம் தேதி இடைத் தேர்தலை சந்திக்க உள்ள 4 தொகுதி சட்டசபை தொகுதி தேர்தலிலும் உங்களுக்குத்தான் எங்கள் ஆதரவு என மகிழ்ச்சியாக சொல்லிச் சென்றுள்ளனர்.
அதிமுக தலைவர்களுடன் சந்திப்பு இல்லை
அதேநேரம், அதிமுக தலைவர்களான ஓ.பன்னீர் செல்வம் அல்லது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக சேதி இல்லை. இதற்கு காரணம், கூட்டணி கட்சிகளை தேர்தலின்போது அதிமுக நடத்திய விதம்தான் என்று குமுறுகிறார்கள். பாமக போட்டியிட்ட தொகுதிகளில் கூட அதிமுக தோளோடு தோள் நின்று வேலை பார்த்ததாம். ஆனால், பிற கூட்டணி கட்சிகளை, யாரோ என்ற ரீதியில் அதிமுக தலைமை கழற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஒப்பந்தம்
லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி ஒப்பந்தம் போட்டபோதே, சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கும், இதே கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில், சூலூர் உட்பட 4 தொகுதிகளுக்குமான இடைத் தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் வெளியே வந்தது. எனவே, இந்த 4 தொகுதிகளிலும் அதிமுகவை நைசாக கழற்றிவிட சில கூட்டணி கட்சிகள் யோசித்து வருகின்றனவாம்.
4 தொகுதி இடைத் தேர்தல்
4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. ஆனால், அந்த தேர்தலில் போதிய ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என சில கூட்டணி கட்சிகள் நினைப்பதால், அதிமுகவுக்கு இத் தேர்தல் ஒரு அக்னி பரிட்சையாக மாறும் வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்குமா, அல்லது, கழற்றிவிடுமா என்ற அச்சம் அதிமுக தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.