ரஜினிக்கு பச்சைக்கொடி காட்டுகிறாரா ராமதாஸ்... திசைமாறும் கூட்டணி பாதை
சென்னை: ரஜினிகாந்துடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கடைசி வரை ராமதாஸ் எந்த மறுப்பும் தெரிவிக்காதது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது என்பதற்கேற்ப ரஜினிகாந்தும், பாமகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து களமாடினால் அதில் ஆச்சரியபடுவதற்கு எதுவுமில்லை.
காரணம் ரஜினியுடன் கூட்டணியா என நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உறுதியாக மறுப்பு ஏதும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை. புன்னகைத்தவாறு கட்சி தொடங்கட்டும் யோசிக்கலாம் என்பதோடு முடித்துக்கொண்டார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்ற ஸ்கெட்ச்?.. டப்பிங் மட்டும்தான் தமிழருவி மணியன்??
எதிரிகள்
நடிகர் ரஜினிகாந்துக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள பகையை பற்றி அரசியலில் உள்ள அனைவரும் அறிந்திருக்க முடியும். கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் திரைப்படங்களில் சிகரெட், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என பாமக குரல் எழுப்பியது. இப்போதும் கூட அந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கிறது பாமக. சமீபத்தில் கூட விஜய்க்கு சிக்ரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என அன்புமணி கடிதம் கூட எழுதினார். ரஜினிகாந்தின் பாபா படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது என ராமதாஸ் உத்தரவு போட, அது ரஜினியை கிளர்ந்தெழ செய்தது.
அறிக்கைப்போர்
இதையடுத்து ரஜினிகாந்தும் பாட்டாளி மக்கள் கட்சி மீது கருத்து யுத்தம் நடத்த தொடங்கினார். வன்முறை ராஜா என ராமதாசுக்கு அடைமொழி எல்லாம் கூட கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள் 6 பேருக்கு எதிராக பகிரங்கமாகவே ரஜினி குரல் கொடுத்தார். தனது ரசிகர்கள் பாமகவுக்கு வாக்களிக்கக் கூடாது எனத் தெரிவித்தார் ரஜினி. ஆனால் அவரது குரல் அன்று எடுபடவில்லை, திமுக கூட்டணியில் இருந்த பாமக 6 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.
கால ஓட்டம்
பின்னர் கால ஓட்டத்தில் தமிழக அரசியலின் திசையும் மாறத்தொடங்கியது. அவரவர் அவரவர்கள் பணியை கவனிக்கத் தொடங்கினர். கருத்துமோதல் கைவிடப்பட்டது. முட்டிக்கொண்டு நின்ற ரஜினியையும், ராமதாஸையும் காலச்சக்கரம் சமாதானம் செய்து வைத்தது. இதனிடையே ரஜினியின் ஆலோசகர் தமிழருவி மணியனும், ராமதாசும் நல்ல நண்பர்கள். நிச்சயம் தமிழருவி மணியனிடம் இருந்து ரஜினி-பாமக கூட்டணி தொடர்பாக ஒரு கருத்து வருகிறதென்றால் அது அவர்கள் இருவரின் கவனத்துக்கு செல்லாமல் வந்திருக்க வாய்ப்பே இல்லை.
யோசிக்கலாம்
இந்த சூழலில் பாமகவின் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸிடம், ரஜினியுடன் கூட்டணி சேருகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு கடைசி வரை அது போன்ற எந்த எண்ணமும் இல்லை என ராமதாஸ் கூறவில்லை. சிரித்த முகத்துடன், அவர் கட்சி தொடங்கட்டும் யோசிக்கலாம் என்பதோடு முடித்துக்கொண்டார். இது ரஜினியுடனான கூட்டணிக்கு பாமகவின் சமிஞ்கையாக இருக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.