210 கிமீ வேகத்தில் சுழன்றடிக்கும் காற்று.. கணிப்புகளை விஞ்சிய டவ் - தே புயல்.. எப்படி சாத்தியமானது?
சென்னை: அரபிக்கடலில் உருவாகி தற்போது குஜராத் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் டவ் - தே புயல் காரணமாக அரபிக்கடலில் 210 கிமீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இது எதிர்பார்த்ததை விட அதிக வேகம் ஆகும்.
கடந்த மே 14ம் தேதி அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது அதி தீவிர டவ் - தே புயலாக மாறியுள்ளது. குஜராத்தின் மேற்கு பகுதியை நோக்கி 20-30 கிமீ வேகத்தில் இந்த டவ் - தே நகர்ந்து கொண்டு இருக்கிறது.
டவ்-தே அதி தீவிர புயலானது குஜராத் டையூ குஜராத் -மஹூவா இடையே இன்று இரவே கரையை கடக்க உள்ளது. குஜராத்தில் இதனால் பலத்த சேதங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி
இந்த புயல் வானிலை மைய கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். கணக்குப்படி டவ் - தே இன்றுதான் அதி தீவிர புயலாக மாற வேண்டும். ஆனால் நேற்று மதியமே இந்த புயல் அதி தீவிரமாக உருவெடுத்தது. நேற்று அதிகாலையிலேயே தீவிர புயலாக இது மாறிவிட்டது. அப்போதே வேகம் எடுக்க தொடங்கிவிட்டது.
கணிப்பு
அதேபோல் இந்த புயல் கரையை கடக்கும் முன் அதன் வேகம் 170 கிமீ ஆக இருக்கும். கரையை கடக்கும் போது 150 கிமீ ஆக இருக்கும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. ஆனால் கணிப்புகளை மிஞ்சி இந்த டவ் - தே புயல் காரணமாக 210 கிமீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.
கரையை கடக்கும்
நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவே டவ் - தே புயல் கரையை கடக்க உள்ளது. மொத்தத்தில் டவ் - தே புயல் நினைத்ததை விட வேகமாக செயல்பட்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து அதி தீவிர புயலாக மாற எடுத்துக்கொண்ட காலம் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே.
அரபிக்கடல்
பொதுவாக அரபிக்கடலில் ஏற்படும் புயல்கள் காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக மாற 4 நாட்களாவது எடுக்கும். ஆனால் டவ் - தே மிக வேகமாக தீவிரம் அடைந்துள்ளது. அரப்பிக்கடலில் இதற்கு முன் ஏற்பட்ட வாயு புயல், நிசார்கா, மேகனு எல்லாமே மூன்றரை முதல் நான்கு நாட்கள் கழித்தே புயலாக மாறியது. ஆனால் டவ் - தே மிக வேகமாக புயலாகி, அதி தீவிர புயலாகவும் மாறியுள்ளது.
அரபிக்கடல் வெப்பநிலை
இந்த டவ் - தே கணிப்புகளை மிஞ்ச அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வு காரணம் என்கிறார்கள். அரபிக்கடலில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை நிலவுகிறது. அங்கு மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசாக உள்ளது. அதோடு 50 மீட்டர் ஆழம் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. இப்படி வெப்பநிலை அதிகம் இருப்பது புயலுக்கு சாதகமாக இருக்கும்.
வெப்பம்
அதிக வெப்பம் என்பது புயலின் வேகத்தை உயர்த்தும். காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்லும். இதுதான் டவ் - தே மிக வேகமாக வலிமைபெற காரணம் என்கிறார்கள். அரபிக்கடல் பொதுவாக வங்க கடலை விட வெப்பமாக இருக்கும் என்பதும், உலக வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதும் கூட இந்த டவ் - தே புயலின் வேகம் அதிகரிக்க மறைமுக காரணங்கள் ஆகும்.