'இருவரின் சுயநலம்.. இனியும் என் முதுகில் குத்த இடமில்லை..' புயலை கிளப்பியுள்ள சசிகலாவின் அடுத்த ஆடியோ
சென்னை: அதிமுக நிர்வாகி ஒருவருடன் சசிகலா பேசும் 42ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் பலரும் என் முதுகில் குத்திவிட்டனர். இனியும் என் முதுகில் குத்த இடமில்லை என்றும் குறிப்பிட்ட சசிகலா, இப்போது தொண்டர்களுக்கும் அவர்கள் அதையே செய்கிறார்கள் என்றும் தொண்டர்களைக் காக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியானது முதலே தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை சசிகலா ஏற்படுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், சென்னைக்கு திரும்பியது முதலே சைலென்ட் மோடிலேயே இருந்தார் சசிகலா. தேர்தல் நெருங்கும் சமயத்திலாவது சசிகலா எதையாவது செய்வார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையிலும் அப்படி எதுவும் அவர் செய்யவில்லை.
சசிகலா
மாறாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், அறிக்கையில் விலகுகிறேன் என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒதுங்கி இருப்பதாக அவர் குறிப்பிடத்தது. மீண்டும் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டும் வகையில் இருப்பதாகப் பலரும் குறிப்பிட்டனர். அதேநேரம் அரசியல் பணயங்களுக்குப் பதிலாக ஆன்மீக பயணத்திலும் இறங்கினார் சசிகலா.
ஆடியோ லீக்
தான் இன்னும் ஆக்டிவாக இருக்கிறேன் என்பதைக் காட்டவே இந்த ஆன்மீக பயணங்களை அவர் மேற்கொண்டார். இது தொடர்பான செய்திகளும் பரபரப்பானது. இந்நிலையில் சசிகலா தொண்டர்களுடன் பேசும் வீடியோ வரிசையாக வெளியாகி அதிமுகவில் பெரிய அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. ஆனால் முதலில் சசிகலா அமமுகவினருடனர் உடனேயே பேசுவதாகவும் அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை என மறுத்தனர்.
முன்னாள் அமைச்சர்கள்
அதன் பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிகள் ஆகியோருடன் சசிகலா பேசும் ஆடியோக்களும் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுடன் பேசியதாகக் கூறப்படும் 15 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதையே இது காட்டுகிறது.
சவால்
இருப்பினும், சசிகலா இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதிமுக நிர்வாகிகளுடன் அவர் பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது. தலைமையின் உத்தரவை மீறி, தொடர்ந்து சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசுவது அக்கட்சியின் தலைமைக்குச் சவால்விடும் வகையிலேயே உள்ளது.
42ஆவது அடியோ
இந்நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவருடன் சசிகலா பேசும் 42ஆவது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சசிகலா பேசுகையில், "அந்த சமயத்தில் அவர் தான்(ஓபிஎஸ்) வெளியே சென்றார். இல்லையென்றால் அவரை தான் நான் (முதல்வர் பதவியில்) உட்கார வைத்துவிட்டுச் சென்றிருப்பேன்.
இருவரின் சுயநலம்
நான் மீண்டும் கட்சிக்கு வருவதாகக் கூறிவிட்டேன். சமீபத்தில் அவர்கள் கட்சியிலிருந்து சிலரை நீக்கியுள்ளனர். ஆனால் இன்னும்கூட பலரும் என்னுடன் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். இருவரின் சுயநலத்திற்காகத் தொண்டர்களை பலிகடா ஆக்கக் கூடாது. இதுதான் ஒரு கட்சி நடத்துபவர்களுக்கு அழகா? தொண்டர்களுக்குக் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தது தவறா? அவர்களுக்கு எதிராக இதுபோல நடவடிக்கை எடுக்கக் கூடாது.
முதுகில் குத்த இடமில்லை
பலரும் என் முதுகில் குத்திவிட்டனர். இனியும் என் முதுகில் குத்த இடமில்லை. அந்தளவுக்கு எனக்குச் செய்தார்கள். இப்போது தொண்டர்களுக்கும் அதையே செய்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அந்த கட்சி கஷ்டப்பட்ட காலத்தில் அதை, சிறப்பான நிலைக்குக் கொண்டுவர ஜெயலலிதா மிகவும் பாடுபட்டார். அவருடன் சேர்ந்து நானும் பாடுபட்டேன்.
தொண்டர்களைக் காக்க வருவேன்
இப்போது கட்சி இருக்கும் நிலையைக் கண்டு, இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. கட்சியைக் காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். கட்சியின் தொண்டர்களே எனக்கு முக்கியம். அதற்கான நேரம் வந்துவிட்டது" என்று அவர் பேசுகிறார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.