டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன்? நான் கலைஞர் பிள்ளை.. ஸ்டாலின் பேச்சு-எழுந்து ஆர்ப்பரித்த தலைவர்கள்!
சென்னை: டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது என்பது காவடி தூக்குவதற்கு அல்ல; கை கட்டி வாய் பொத்தி உத்தரவு என்ன என கேட்பதற்காக நான் செல்லவில்லை; தமிழ்நாட்டுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற செல்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிப்புடன் வரவேற்றனர்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், திமுக- பாஜக இடையே கூட்டணி ஒரு போதும் இல்லை; சனாதனவாதிகளாள் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறோம்; சனாதன சக்திகளுடன் ஒரு போதும் திமுக சமரசம் செய்து கொள்ளாது என்றார்.
இது நடந்திருந்தால்.. திருமாவுக்கு நானே திருமணம் செய்து வைத்திருப்பேன்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு
டெல்லி பயணம்
மேலும் தமது டெல்லி பயணம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நான் இப்போது இரு பொறுப்புகளில் இருக்கிறேன். இது உங்களுக்கும் தெரியும்... திருமாவுக்கும் தெரியும்.. இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஒன்று கட்சித் தலைவர் பொறுப்பு. இன்னொன்று அனைவருக்குமான தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். உங்களால் உட்கார்ந்திருக்கக் கூடியவன் நான். இங்கே ஆசிரியர் (கி.வீரமணி) பேசும்போது, நேரமில்லாத காரணத்தால் சூசகமாக, சுருக்கத்தோடு டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது பற்றி குறிப்பிட்டார்.
காவடி தூக்கவா?
நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி வாய் பொத்தி உத்தரவு என்ன என? கேட்பதற்கா போகிறேன். கலைஞர் பிள்ளை நான்.. உறவுக்குக் கை கொடுப்போம்.. உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதை மனதிலே நிலை நிறுத்திக் கொண்டிருப்பவன் நான். ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலே, ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களைப் பெற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
ஒட்டும் இல்லை- உறவும் இல்லை
ஆகவே, ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறதே தவிர திமுகவுக்கும் பாஜகவுக்கும் அல்ல. திமுக கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவுமே கிடையாது. ஆகவே சகோதரர் திருமாவளவன், கொஞ்சம் கூட- கிஞ்சித்தும் கூட கவலைப்பட வேண்டாம்.. எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக் கொடுக்க மாட்டான். சகோதரர் திருமாவளவன் சொன்னது போல குறைந்தபட்சம் சமரசமும் செய்து கொள்ள மாட்டான் இந்த ஸ்டாலின்..உங்கள் சகோதரன் நான். உரிமையோடு இதை நான் சொல்ல விரும்புறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டம் ஆர்ப்பரிப்பு
இந்நிகழ்ச்சியில் "நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி வாய் பொத்தி உத்தரவு என்ன என? கேட்பதற்கா போகிறேன். கலைஞர் பிள்ளை நான்.." என ஆவேசமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, மேடையில் இருந்த திருமாவளவன் உள்ளிட்டோர் எழுந்து நின்று கைதட்டி ஆராவாரம் செய்தனர். கீழே அமர்ந்திருந்த விசிக தொண்டர்கள், பார்வையாளர்களும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து முதல்வர் ஸ்டாலின் இந்த கருத்தை வரவேற்றனர்.