முதலமைச்சரின் முதல் கள ஆய்வே 'தெறி'! 24 மணி நேரத்திற்குள் கலெக்டர் டிரான்ஸ்ஃபர்! அதிரடி பின்னணி!
முதல்வர் ஆய்வு நடத்தி முடித்த 24 மணி நேரத்திற்குள் கலெக்டர் இடமாற்றம்
சென்னை: வேலூர் மண்டலத்தில் கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு நடத்திய நிலையில், அந்த மண்டலத்திற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா அதிரடியாக பந்தாடப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இனி வரும் காலங்களில் முதலமைச்சர் மேற்கொள்ளும் கள ஆய்வுக்கு பிறகு அதிரடி மாற்றங்களும், நடவடிக்கைகளும் இருக்கும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும்; தொய்வுகளை நீக்க வேண்டும் என்ற இலக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டம்மி பதவிகளுக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கள ஆய்வை அடுத்து! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்
கள ஆய்வில் முதல்வர்
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், 2 நாட்களாக அங்கேயே முகாமிட்டு பல மணி நேரங்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதித்தார். மேலும், ஏதோ குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தாம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவில்லை என்றெல்லாம் எடுத்துக் கூறினார்.
அதிரடி டிரான்ஸ்பர்
முதல்வரின் இந்த கள ஆய்வில் தலைமைச் செயலாளர் இறையன்புவும் உடனிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு முதல்வர் ஸ்டாலினும், தலைமைச் செயலாளர் இறையன்புவும் சென்னை திரும்பிய நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராணிப்பேட்டை கலெக்டராக இருக்கும் பாஸ்கர பாண்டியனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
என்ன பின்னணி?
இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் முதலமைச்சரின் அதிருப்தி இருக்கலாம் என கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் இனி அடுத்து எந்த மண்டலத்திற்கு ஸ்டாலின் ஆய்வுக்கு வருவாரோ என அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
அடுத்தக்கட்ட அலுவலர்கள்
வழக்கமாக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களை சந்திப்பது தான் முதலமைச்சரின் வழக்கம். ஸ்டாலினுக்கு முன்னால் முதலமைச்சர்களாக இருந்தவர்களும் இதை தான் செய்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் மட்டும் தான் அடுத்தகட்ட அலுவலர்களோடும் அமர்ந்து பேசி அரசின் திட்டங்களை சுணக்கமின்றி செயல்படுத்த ஊக்கம் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.