கீழடி நகரம் கண்டுபிடிக்க வழிகாட்டிய முதியவர்.. மனம் திறந்த அமர்நாத் ராமகிருஷ்ணா
சென்னை: கீழடி ஆராய்ச்சிக்கு வழிகாட்டியதே ஒரு முதியவர்தான் என இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் நேற்று கீழடியில் கிளைவிட்ட வேர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கீழடி நாகரிகத்தை சங்க கால நாகரிகம் என அழைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த ஆய்வின் முதல்கட்ட பணியாக தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள தொல்லியல் மேடுகளை கண்டறிவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.
சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய “கீழடியில் கிளைவிட்ட வேர்” கருத்தரங்கம்
வீடு கட்ட குழி
அப்போது வருசநாடு அருகே சீல முத்தையாபுரம் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தோம். அப்போது உடைந்த பானைகள், ஓடுகள், கல்வெட்டுகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டறிந்தோம். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார்.
நெருப்பினாலான குடுவை
அப்போது அதிலிருந்து ஒரு சிவப்பு, கருப்பு நிறத்தினாலான குடுவை கிடைத்தது. அதை அவர் தொல்லியல் துறையிடம் கொடுத்தார். அந்த குடுவை பழமையான சங்க காலத்தை சேர்ந்தது. அதுவும் நெருப்பினால் சுடப்பட்ட குடுவை என தெரியவந்தது.
200 கிராமங்கள்
அந்த முதியவர் முதன்முதலாக தொல்லியல் துறையினரிடம் காண்பித்த குடுவைதான் வைகை நதிக்கரையில் இரு புறமும் தொல்லியல் மேடுகள் கொண்ட 200 கிராமங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த கிராமங்களில் ஒன்றுதான் கீழடி.
கூடுதல் காலங்கள்
அந்த முதியவர் மட்டும் அந்த குடுவையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே இருந்திருக்கும். இதுகுறித்த ஆய்வுக்கு இன்னும் கூடுதல் காலங்கள் பிடித்திருக்கலாம் என்றார்.