அலற விட்ட அதிமுக... கேட்டதும் கிடைக்கலை.. சுதீஷ் விரும்பியதும் நடக்கலை.. பெரும் சோகத்தில் தேமுதிக!
சென்னை: என்னங்க இது ஒரு ஆசைன்னா சரி, எந்த ஆசையும் நிறைவேறாட்டி எப்படி? அப்படித்தான் இப்போது தேமுதிகவின் நிலை உள்ளது இன்று வெளியான அதிமுகவின் தொகுதி பங்கீடு குறித்த உத்தேச பட்டியல்.
கடந்த சில தினங்களாக தேமுதிகவில் ஆளாளுக்கு ஒன்று சொல்லி வந்தனர். சுதீஷ், பிரேமலதா, விஜய பிரபாகரன் என ஆளுக்கு ஒன்னு பேசி வந்தனர். தனித்து போட்டி, கூட்டணியில்தான் இருக்கிறோம், தனித்து போட்டியிட தயார் என்றெல்லாம் பேசி வந்தனர்.
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை சீக்கிரமே தொடங்குங்கள் என பிரேமலதா வாய் திறந்து கேட்டு விட்டார். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலை போல் 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
15 தொகுதிகள்
ஆனால் அதிமுகவோ 10 முதல் 15 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் என கறாராக தெரிவித்து விட்டதாம். தனித்து போட்டி, எங்களுக்கு தனித்து போட்டியிட்டு ஏற்கெனவே பழக்கம் இருக்கிறது, இப்படியெல்லாம் பிலிட்ப் செய்தால் தொகுதியின் எண்ணிக்கை உயரும் என பார்த்த தேமுதிகவுக்கு அதிமுக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
உண்மையான பட்டியல்
இன்றைய தினம் அதிமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் ஒன்று உலா வருகிறது. அதில் தேமுதிகவுக்கு வெறும் 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுக்கு 20 தொகுதிகளும் பாமகவுக்கு 21 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது உத்தேசம்தான் என்றாலும் உண்மையான பட்டியலில் கூட குறைய இருக்கலாம்.
பாதிக்கு பாதி
40 கேட்டு அதில் பாதிக்கு பாதி கூட கிடைக்காதது தேமுதிகவுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் அண்மையில் சுதீஷ் ஆம்பூரில் பேசுகையில் தலைமை உத்தரவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னை ஆம்பூரில் பார்க்க முடியும் என ஆம்பூர் தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதை சூசகமாக சொன்னார்.
ஆம்பூர் தொகுதி
இந்த நிலையில் சுதீஷ் ஆசைப்பட்டதும் நடக்கவில்லை. இன்று சமூகவலைதளங்களில் உலா வரும் அதிமுக தொகுதி பங்கீட்டு உத்தேச பட்டியலில் ஆம்பூர் தொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தேமுதிகவுக்கு கேட்டதும் கிடைக்காமல் விரும்பிய தொகுதிகளும் கிடைக்காமல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.