மெல்ல வேகமெடுக்கும் "மாண்டஸ்" புயல்! எங்கெல்லாம் கனமழை இருக்கும்? அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகும் நிலையில், முதல்முறையாக மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பித்தது. அப்போது ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நவ. முதல் வாரம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை இருந்தது.
இருப்பினும், அதன் பிறகு மழை இல்லை. இப்போது வரை மழை எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவாகவே உள்ளதாக வானிலை மையங்கள் கூறியுள்ளன.
உருவானது ‛மாண்டஸ்’புயல்.. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. ‛அலர்ட்’ மக்களே
மாண்டஸ் புயல்
கடந்த மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் கரையை அடையும் முன் வலுவிழந்ததால் மழை கிடைக்கவில்லை. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இப்போது தான் புயல் உருவாகி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கரையை கடக்கும்
இந்தப் புயல் இப்போது தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ளது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த இந்தப் புயல் இப்போது மேலும் மெதுவாக 6 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்த போது 15 கிமீ வேகத்தில் நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாண்டஸ் புயல் புதுவை ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா, வர்தா
இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 85 கிமீ வரையிலும் கூட காற்று வீசலாம். அதேநேரம் இதனால் கஜா, வர்தா புயல்களைப் போலச் சூறாவளிக் காற்று இருக்காது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய வானிலை மையம் வரும் காலத்தில் நிலவும் வானிலை தொடர்பாக முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இந்திய வானிலை மையம் தனது செய்திக்குறிப்பில், " தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாகத் தீவிரமடைந்தது. இப்போது அது கடந்த 6 மணி நேரமாக 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
எங்கு உள்ளது
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 330 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னையில் தென்கிழக்கே சுமார் 580 கி.மீ. தொலைவிலும் இது இப்போது நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டிசம்பர் 09 நள்ளிரவில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மழை
இன்று கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் வடகடலோர தமிழகம், புதுச்சேரி, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது நாளை மறுநாள் அதாவது டிச.10ஆம் தேதி லேசான மழையாகக் குறையும். அதேநேரம் டிசம்பர் 10ஆம் தேதி வட தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை
மீனவர்கள் டிசம்பர் 08 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், டிசம்பர் 08 முதல் 10 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், டிசம்பர் 08 மற்றும் 09 ஆம் தேதிகளில் இலங்கைக் கரையோரம் மற்றும் அதற்கு அப்பால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். அதேபோல மன்னார் வளைகுடாவுக்கு வரும் டிசம்பர் 08 முதல் 10 வரை தேதியும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்