40 முக்கியமில்லை.. 21 தான் முக்கியம்.. சட்டமன்ற இடைத்தேர்தலில் குறியாக இருக்கும் அதிமுக!
21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆதரவு அளித்தால் மட்டுமே கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள முடியும் என்று அதிமுக உறுதியாக இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆதரவு அளித்தால் மட்டுமே லோக்சபா கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள முடியும் என்று அதிமுக உறுதியாக இருந்துள்ளது. இந்த கோரிக்கையுடன்தான் அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது.
அதிமுக - பாமக - பாஜக தேர்தல் கூட்டணி தற்போது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் நடக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால் அதிமுக இந்த 21 சட்டமன்ற தொகுதிகளில் மிக அதிக கவனம் செலுத்தி உள்ளது.
கண்டிப்பு
இந்த கூட்டணி பேச்சுவார்த்தை முழுக்க அதிமுக ஒரே ஒரு கோரிக்கைத்தான் அனைத்து கட்சிகளுக்கும் வைத்தது. அதன்படி இந்த கூட்டணி உருவாக வேண்டும் என்றால் சட்டமன்றத்தின் 21 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்று கூறியது.
என்ன காரணம்
இந்த 21 தொகுதி இடைத்தேர்தல் லோக்சபா தேர்தலுடன் நடக்க வாய்ப்புள்ளது. இதில் ஒருவேளை அனைத்திலும் அதிமுக தோல்வி அடைந்தால் ஆட்சியே கவிழும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக கண்டிப்புடன் கேட்டு இருக்கிறது.
பாமக
காலையில் பாமகவுடன் கூட்டணி குழப்பம் நீடித்ததற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. பாமக முதலில் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறி இருக்கிறது. இதன் காரணமாக நீடித்த குழப்பம்தான் பாமக - அதிமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகுவதை தாமதப்படுத்தியது.
தேமுதிகவுடன்
அதேபோல் தற்போது தேமுதிக - அதிமுக - பாஜக கூட்டணி உருவாகாமல் இருப்பதற்கு காரணமும் இதுதான் என்று கூறப்படுகிறது. தேமுதிக கண்டிப்பாக 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் அதிமுக கண்டிப்பாக இதில் ஆதரவு வேண்டும் என்று கேட்டு வருகிறது. இதனால்தான் இந்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.