தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக
சென்னை: வெற்றிக்கான வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே பாஜகவினர் கேட்ட தொகுதிகளை பார்த்து அதிமுக திகைத்து போய் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 2ம்தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. தங்களுக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்று கட்சிகள் விரும்புகின்றன.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. நேற்று பாஜக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தொடங்கியது.
அதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம்? ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக்
பாஜக பேச்சுவார்த்தை
நேற்று உள்துறை இணையமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷாண் ரெட்டி, மத்திய இணையமைச்சர் விகே சிங், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, பாஜக அமைப்பு பொதுசசெயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினர். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இருந்தனர்.
21 தொகுதிகள்
பேச்சுவார்த்தையின் போது பாஜக பொறுப்பாளர்கள் 60 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொகுதி பட்டியலை அளித்ததாக கூறப்படுகிறது,. ஆனால் 21 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த 21 தொகுதிகளை பாஜக ஏற்கும் என்றே கூறப்படுகிறது.
எந்தெந்த தொகுதிகள்
எனினும் வெற்றிக்கு வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அந்த 21 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் ஆகியோருடன் பேசி விரைவில் இறுதி செய்ய பாஜக விரும்புகிறது. பாஜக கோவையில் உள்ள சில தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் சில தொகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சென்னையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், மயிலாப்பூர் போன்ற தொகுதிகளை கேட்டு பெற விரும்புவதாக சொல்லப்படுகிறது. இவற்றை அதிமுக தருமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
வெற்றி வாய்ப்பு
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர், சட்டசபை தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்வதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை வழங்கியதுடன்,வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என அறிவுறுத்தினாராம். புதுச்சேரியிலம் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்து அதிக தொகுதிகளை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.