பல சந்திப்புகள்.. வந்த வேலை முடிந்தது.. டெல்லி புறப்பட்டு சென்றார் அமித்ஷா!
சென்னை: தமிழகத்திற்கு சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்ப ஏராளமான பாஜகவினர் திரளாக பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் ஆகியோரும் நேரில் சென்று அமித்ஷாவை வழி அனுப்பி வைத்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார். நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த தமிழக அரசு விழாவில் கலந்துகொண்டார்.
தேர்கண்டிகை நீர்தேக்கத்தை திறந்து வைத்தார்., கரூர் அருகே கதவணை திட்டம். மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணிகள், கோவை அவிநாசி உயர்மட்ட சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிந்ததும் சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்தர ஓட்டலில் தங்கினார்.
இரவு 11 மணிக்கு மீட்டிங்.. 3 மணி நேரம் நீண்ட தீவிர ஆலோசனை..குருமூர்த்தியிடம் என்ன பேசினார் அமித் ஷா?
குருமூர்த்தி சந்திப்பு
அங்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இதேபோல் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோரை சந்தித்தும் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா பங்கேற்பு
அத்துடன் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான கூட்டமும் நடந்தது. இந்த சந்திப்புகளில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷா பாஜக நிர்வாகிகளிடம் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். கடினமாக உழையுங்கள் என்று வலியுறுத்தினார்.
அதிமுக ஒப்புக்கொள்ளும்
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடனான ஆலோசனையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். அத்துடன் நிறைய தொகுதிகளில் வெல்ல வியூகம் வகுத்து வருகிறார். எனவே முன்பைவிட தொகுதிகள் அதிகமாக ஒதுக்க அதிமுக ஒப்புக்கொள்ளும் என கூறப்படுகிறது
வழிஅனுப்பி வைத்த ஓபிஎஸ்
இந்நிலையில் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை ஓட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு அமித் ஷா சென்றார். அங்கிருந்து 10.45 மணி அளவில் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரை பாஜக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் ஆகியோரும் நேரில் சென்று அமித்ஷாவை வழி அனுப்பி வைத்தனர். பாஜக தொண்டர்கள் திரளாக வந்தனர். அதிமுக தொண்டர்கள் வரவில்லை.