சசிகலா சொன்ன வாழ்த்து.. அமித் ஷா அனுப்பிய இந்தி கடிதம்.. தமிழக அரசியலில் செம டிவிஸ்ட் காத்து இருக்கு
திவாகரன் வீட்டு திருமண விழாவிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து கடிதம் அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: திவாகரன் வீட்டு திருமண விழாவிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து கடிதம் அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று மூன்று வருடம் ஆகிவிட்டது.
கணக்குப்படி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார். இந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சசிகலா சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன திருமணம்
சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், அவரின் சகோதரர் திவாகரன் வீட்டு திருமணம் தற்போது பெரிய கவனம் பெற்றுள்ளது. திவாகரன் மகன் ஜெயானந்த் திருமணம் இந்த மாதம் 5ம் தேதி சென்னையில் நடந்தது. அதேபோல் அதற்கான வரவேற்பும் சென்னையில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சிதான் சசிகலாவுக்கு சாதகமாக முடிந்துள்ளது. இது பெரிய அரசியல் நிகழ்வு போல் நடத்தப்பட்டது.
பயம் இல்லை
இதை அரசியல் நிகழ்வு என்று சொல்வதற்கு நிறைய காரணம் உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் வந்து இருந்தனர். அதிமுகவின் தலைமைக்கு பயமின்றி திவாகரன் வீட்டு விழாவிற்கு அதிமுகவினர் பலர் வந்து இருந்தனர். அதிமுகவினர் மட்டுமில்லை, பாஜகவை சேர்ந்த பலரும் இந்த விழாவிற்கு வந்துள்ளனர். தமிழக பாஜகவில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் சிலர் விழாவிற்கு வந்துள்ளனர்.
தமிழகம் எப்படி
ஆம் தமிழக பாஜகவை பின்னிருந்து இயக்கும் சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும் வந்துள்ளனர். இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இதற்கு பின் பெரிய உழைப்பு உள்ளது என்கிறார்கள். திவாகரன் கடந்த ஒரு வருடமாக இந்த திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்தார். பல பாஜக தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் குறித்து பேசினார். தமிழக பாஜகவிற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்வேன் என்று உறுதியாக கூறினார்.
தூது சென்றார்
அதேபோல் சசிகலா சார்பாக திவாகரன் மத்திய பாஜக தலைவர்கள் பலரிடம் ஆலோசனை செய்தார். சசிகலாவை விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்தால், தமிழக அரசியலில் அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறோம் என்று தூது சென்றதாக கூறப்படுகிறது. இதை பாஜக தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக தலைவர்கள், திவாகரன் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது .
சிக்னல் என்ன
இதற்கு அமித் ஷா கொடுத்த சிக்னல்தான் வாழ்த்து கடிதம் என்கிறார்கள். ஆம் ஜெயானந்த் திருமணத்திற்கு அமித் ஷா வாழ்த்து கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகத்தின் லெட்டர் பேடில் இந்த வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த கடிதம் இந்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. என்னால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை , உங்கள் திருமண விழாவிற்கு வாழ்த்துக்கள் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
வெளியே வருவார்
அதேபோல் சசிகலாவும் இந்த திருமணத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். இந்த இரண்டு கடிதமும் அந்த விழாவில் வாசிக்கப்பட்டது. சசிகலாவின் விடுதலைக்கு அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னல்தான் இது என்று கூறுகிறார்கள். இதற்கு திவாகரன் சிறந்த பாலமாக திகழ்வார் என்று கூறப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழக அரசியலில் இந்த கடிதம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
தினகரன் பாலம்
சசிகலா வெளியே வருவது இதனால் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். அவர் வெளியே வந்த பின் அரசியல் ரீதியாக அவருக்கு நிறைய வாய்ப்புகள் சலுகைகள் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக இது தமிழக அரசியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் கூறப்படுகிறது. சசிகலா - அமித் ஷா இடையே ஏற்பட்டு இருக்கும் இந்த நெருக்கம் அதிமுகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.