அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு - வட சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணுரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம், அமித்ஷா தங்கும் லீலா பேலஸ் ஓட்டல் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கலைவாணர் அரங்கத்தின் உள்ளேயும், லீலா பேலஸ் ஓட்டலுக்கு உள்ளேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரையில் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கோ பேக் அமித்ஷா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணுரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது.