நாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு
சென்னை: நாளை பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்த பின் வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் பாஜக நாளை கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மதிய விருந்துடன் நாளை டெல்லியில் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தலைமை அழைப்புவிடுத்துள்ளதாக தெரிகிறது.
அதிமுக குறைந்த இடங்களை பிடிக்கும்: இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.. எடப்பாடியார்!
இந்த விருத்து மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், மற்றும் மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது, அமைச்சரவையில் பங்கேற்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.