அமித் ஷா இறங்கியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.. இன்னும் "மாயாஜாலம் செல்லாது"ன்னு திமுக நம்புவது.. சரிவருமா?
சட்டசபை தேர்தலுக்குள் திமுக சுதாரிக்க வேண்டி உள்ளது
சென்னை: ஒரே ஒரு நாளில் பலவித அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது அமித்ஷாவின் சென்னை வருகை!
கூட்டணி உடன்பாடு, முதல் சகலத்தையும் முடித்து விட்டு போனாலும், "அமித்ஷாவின் அரசியல் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது" என்று ஜவாஹிருல்லா ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.. அப்படியானால், அமித்ஷாவின் செயல்பாடுகள் எல்லாமே வெறும் மாயாஜாலமா? அல்லது மாஸ் காட்டும் திறனா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விஷயத்தை ஒன்று பாஜக கூட்டணி தரப்பில் இருந்தும், மற்றொன்று திமுக கூட்டணி தரப்பில் இருந்தும் என ரெண்டு விதமாக அணுக வேண்டி உள்ளது.
கூட்டணி
அமித்ஷா வருவதற்கு முன்புவரை, பாஜக அதிமுக கூட்டணியில் சேருமா, சேராதா என்ற சந்தேகம்தான் எழுந்தது.. அதற்கு காரணம், எல்.முருகன் பொறுப்பேற்றது முதல் அதிமுகவுடனான பலவிஷயங்களில் மனக்கசப்பு ஏற்பட்டது.. தன்னுடைய அதிருப்தியை முருகன் பொதுவெளியில் வெளிப்படுத்தியதுடன், கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றும் சொல்லி அதிமுகவை உசுப்பேத்தினார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையிடம் முடிவு செய்யும் என்றார்கள்.. 60 சீட் வேண்டும் என்றார்கள்
அம்மா நாளிதழ்
இதற்கு பிறகுதான், தனித்து போட்டி என்று ஓ.எஸ். மணியன் ஒரே போடாக போடவும், அலறி கொண்டு ஓடிப்போய் முதல்வரை சந்தித்தார்.. இருந்தாலும் வேல் யாத்திரையில் பாஜகவை மொத்தமாக ஆஃப் செய்தது அதிமுக தரப்பு.. அத்துடன் நில்லாமல் நமது அம்மா நாளிதழிலும் பகிரங்கமாக இந்துத்துவா அரசியலை விமர்சித்து தமிழக பாஜகவின் தலையில் கொட்டு வைத்தது!
நொறுங்கியது
அப்படியானால், அதிமுக இனி பாஜகவுக்கு பணிந்து நடக்காது என்றுதான் கருதப்பட்டது.. மொத்தமும் அமித்ஷா ஏர்போர்டில் வந்திறங்கிய உடனேயே நொறுங்கிவிட்டது.. அதிமுகவினர் திரண்டு கூடி வரவேற்றனர்.. கால்நடுக்க நின்று முதல்வரே வரவேற்றார்.. வழக்கம்போல "பணிந்து" தன் விசுவாசத்தை காட்டினார் ஓபிஎஸ்!
விஸ்வரூபம்
இதையெல்லாம் பார்க்கும்போது பாஜக என்ற கட்சி விஸ்வரூபமெடுத்துவிட்டதை போலவே தென்பட்டது.. அதற்கேற்றபடி லீலா பேலஸ் ஓட்டலில் ஜெயக்குமாரை வெளியே அனுப்பிவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ்ஸும் அமித்ஷாவிடம் பேசியிருக்கிறார்கள் என்றால், இதையும் கவனிக்க வேண்டி உள்ளது... ஆக, கூட்டணி உறுதியானது என்ற மேலோட்டமான முடிவுடன் இதை கடந்து விட முடியாது.. இதில் சசிகலா விடுதலை விவகாரம் உட்பட எல்லாமே அடங்கி உள்ளது.
வேடிக்கை
இவ்வளவு வேலை பார்த்துவிட்டு அமித்ஷா போயுள்ள நிலையில் இன்னமும்கூட இதெல்லாம் மாயாஜாலம் என்று திமுக கூட்டணி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.. வருஷ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று லிஸ்ட் கேட்டுள்ளார் அமித்ஷா.. மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியைவிட இரு மடங்கு நிதி தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஆணித்தரமாக எடுத்து கூறியுள்ளார் அமித்ஷா. வாரிசு அரசியல் குறித்து அக்குவேறு ஆணிவேராக எடுத்து வைத்து மேடையில் பேசியுள்ளார் அமித்ஷா.
துரைமுருகன்
இதையெல்லாம்கூட மாயாஜாலம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்ள முடியாது.. "அரசு விழாவை, அமித்ஷா அரசியல் மேடையாக்கி விட்டார்" என்று வேண்டுமானால் துரைமுருகன் சாடலாமே ஒழிய, பாஜக கேள்வி எழுப்பும் நிலைமைக்கு உயர்ந்துவிட்டது என்பதே உண்மை! இதற்காக அதிமுக சந்தோஷப்பட முடியாது.. இதே அமித்ஷாதான் அன்று இங்கு வந்திருந்தபோது, இந்தியாவில் ஊழல் செய்வதில் தமிழகத்தை ஆளும் அதிமுக தான் முதலிடம் என்பதையும் இங்கு நினைவுகூரவேண்டி உள்ளது.
பீகார் தேர்தல்
அப்போது அமித்ஷாவின் வருகை வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, இப்போது தமிழக அரசியலையே அசைத்து விட்டு போயுள்ளது.. இதை திமுக சீரியஸாகவே உற்று கவனிக்க வேண்டும். ஒரு எச்சரிக்கை குறியாகவே அணுக வேண்டியும் உள்ளது.. பீகார் போல தமிழகத்தை மாற்ற, இவர்களுக்கு நேரம் பிடிக்காது.. எனவே இன்னமும் மெத்தன போக்கு, இன்றைய பாஜகவுக்கு பொருந்தாது.. தொடர்ந்து அலட்சியப் போக்கில் திமுக கூட்டணி இருப்பதை போலவே தென்படுகிறது.. உடனடியாக சுதாரித்து கொள்ளுமா அறிவாலயம்?