பியூஷ் கோயல் மட்டும்தான் வருகிறாராம்.. அதிமுக கூட்டணியில் பெரிய பிரச்சினை போலயே!
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று சென்னை வருவதாக இருந்த பாஜக தலைவர் அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பியூஷ் கோயல் மட்டுமே சென்னை வரவுள்ளாராம்.
தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது. லோக் சபா தேர்தலுக்கான தமிழக பாஜ.க. பொறுப்பாளராக பியுஸ் கோயல் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்ததை அடுத்து, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் வருவதாக இருந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் வருகை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மட்டும் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை வரவுள்ளார் என்கிறார்கள்.
கடைசி கட்டத்தில் கூட்டணிக்குள் எவ்வளவு தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் எழுந்த முரண்பாடே அமித் ஷா வருகை ரத்துக்கு காரணம் என்று தெரிகிறது.