தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்.. விரைவில் தமிழில் பேசுவேன்.. வாக்குறுதி அளித்த அமித்ஷா!
சென்னை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ரஜினிகாந்த், குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழில் பேசுவேன்
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியில் பேசினார். அவர் பேசுகையில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. விரைவில் தமிழ் கற்று கொண்டு பேசுவேன்.
சிறப்பு அந்தஸ்து
பாஜக தேசிய தலைவர் என்ற முறையிலோ, எம்பி என்ற முறையிலோ, மத்திய அமைச்சர் என்ற முறையிலோ இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. வெங்கையா நாயுடுவின் மாணவர் என்ற முறையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளேன். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அரசு நீக்கியது.
சிறைவாசம்
ஆனால் அதற்காக மாணவர் பருவத்திலேயே போராடியவர் வெங்கையா நாயுடு. அவசர நிலையின் போது ஜனநாயகத்தை மீட்க போராடி சிறைவாசம் அனுபவித்தவர். கல்லூரி மாணவரிலிருந்து துணை குடியரசுத் தலைவர் வரை வெங்கையாவின் வாழ்க்கை சிறந்த பாடம்.
சீரிய தலைமை
காஷ்மீர் மசோதாவை வெங்கையாவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம். விவசாய குடும்பத்தை சேர்ந்த வெங்கையா நாயுடு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு வகுத்து தர காரணமாக இருந்துள்ளார் என்றார் வெங்கையா.