மீண்டும் புத்துயிர் பெறும் அம்மா குடிநீர்... தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் நோக்கில் அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.
அனைத்து பேருந்துநிலையங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்கள் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் திடீரென பெரும்பாலான பேருந்து நிலையங்களில் மூடப்பட்ட நிலையில், மீண்டும் புத்துயிர் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தொடங்கிய மழை.. பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
ரூ.10-க்கு விற்பனை
அம்மா குடிநீர் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததுடன் அதனை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தியும் காட்டினார். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை 10 ரூபாய் என விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட அம்மா குடிநீர் கேன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பேருந்துநிலையங்கள்
அம்மா குடிநீர் கேன்கள் பேருந்து நிலையங்களில் மட்டும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த திட்டம் சுணக்கம் கண்டது. மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான பேருந்துநிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை மையங்கள் மூடப்பட்டன.
அரசு நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், தமிழக அரசு இப்போது ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ரூபாய்க்கு சுத்திரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. சென்னை தரமணியில் அமைந்துள்ள சாலை போக்குவரத்து நிறுவனம் இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் கேன்கள்
அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள மதுரை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட 8 கோட்டங்களுக்குட்பட்ட அனைத்துப் பேருந்து நிலையங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு லட்சம் கேன்கள் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.