அமமுகவுக்கு இன்று 3 வயது... கட்சியினருக்கு டிடிவி தினகரன் நெகிழ்ச்சி மடல்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் கட்சியினருக்கு டிடிவி தினகரன் நெகிழ்ச்சி மடல் எழுதியிருக்கிறார்.
அந்த மடலில், குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அமமுக போட்டியிட்டு வெற்றி வாகை சூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவுகள் காற்றலைகளில் கலந்திருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியிலேயே அமமுகவுக்கு புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலூர்
கடந்த 2018 மார்ச் 15-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் சொந்த நிலத்தில் கட்சி துவக்க விழா நடைபெற்றது. அதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை திரும்பி பார்க்கவைத்தார் தினகரன். மேலும், திவாகரனுடன் அப்போது கருத்து வேறுபாடு இல்லாததால் ஒட்டுமொத்த சசிகலா உறவுகளும் தினகரன் பின்பு அணி வகுத்து நின்றன.
சேதாரம்
இந்நிலையில் தினகரன் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் இன்று மூன்றாவது ஆண்டு தொடங்குகிறது. கட்சி தொடங்கும் போது தினகரனுடன் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் இப்போது அமமுகவில் இல்லை. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திப் வளர்ச்சி தேக்கமடைந்தது. தினகரனின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் பிடிக்காமல் இசக்கி சுப்பையா, செந்தில்பாலாஜி, பரணி கார்த்திக், பாப்புலர் முத்தையா, தங்க தமிழ்செல்வன், புகழேந்தி, எதிர்க்கோட்டை சுப்பிரமணியன், என பலர் தினகரனுக்கு டாடா காட்டிவிட்டனர்.
புதிய அலுவலகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு இப்போது தான் சொந்தமாக கட்சி அலுவலகத்தையே தொடங்கியுள்ளார் தினகரன். அதுவும் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்துக்கு அருகிலேயே தனது கட்சி அலுவலகத்தை கட்டியுள்ளார். இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில் அமமுக அலுவலகம் பெயருக்கு இயங்கி வந்ததே தவிர அங்கு எந்த ஆலோசனையும், அலுவல் பணியும் தினகரன் மேற்கொண்டதில்லை. இதனிடையே சசிகலாவை விரைவில் வெளியே கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வரும் தினகரன், மூன்றவாது ஆண்டில் முழு வீச்சில் கட்சிப்பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
கடிதம்
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை புதிய உற்சாகத்தோடு தொடங்க வேண்டும் என்றும், பதிவுபெற்ற கட்சியாக ஒரே சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம் எனவும் கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார் தினகரன். மேலும், மக்கள் மனங்களை வெல்லும் வகையில் அமமுகவினர் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.