அம்மா இருசக்கர வாகன திட்டம்.. ஜூன் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
Recommended Video
சென்னை: அம்மா இருசக்கர வாகன திட்டம் மானியம் பெற ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதிக்குள் வேலைக்கு செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அறிவிப்பில் அரசு கூறியுள்ளதாவது: அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான காலக்கெடு ஜூலை 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மகளிர் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களை வழங்கலாம்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மட்டும்) மற்றும் கடன் தொகையில் இரு சக்கர வாகனம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் மகளிருக்கு 2018 - 2019 - ஆம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் இதற்காக, நகர்ப்புற, கிராமப்புற மகளிரிடம் இருந்து, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஜுன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
தற்போது, வேலைக்குச் செல்லும் பெண்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழை மகளிரை குடும்பத் தலைவராக கொண்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மானிய விலையிலான அம்மா இருசக்கர வாகனத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவானது வியாழக்கிழமை (ஜூன் 20) முதல் ஜூலை 4 - ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் தகுதியான மகளிர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகளிர் திட்ட அலுவலகம்
இதற்கான விண்ணப்பங்களை, அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.25 ஆயிரம் பணம்
எளிதாக இயக்கக்கூடிய (Gearless/Auto geared) கியர்லஸ்/ஆட்டோகியர் இருசக்கர வாகனங்களை இத்திட்டதின் கீழ் வாங்கலாம். மேலும், மாற்றுத்திறனாளி மகளிர் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் வாங்கலாம்.மகளிருக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
கூடுதல் மானியத் தொகை
மேலும், மாற்றுத்திறனாளி மகளிருக்கு கூடுதல் வசதி பொருத்தப்பட்ட வாகனத்திற்கு மானியத்தொகையாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.31,250/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும். பயன்பெறும் மகளிர் தங்களுக்கு விருப்பப்பட்ட வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் Retro - fitted வகையிலான வண்டி வாங்கினால் மட்டுமே கூடுதல் மானியத் தொகை வழங்கப்படும்.
2018ம் ஆண்டு மாடல்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சொந்த முதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125-சிசிக்கு மிகாமல் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (1988) பதிவு செய்யக் கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். 2018ம் ஆண்டு மாடல் மாசு ஏற்படுத்தாத அல்லது பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.2,50,000
மகளிர் பயனாளி, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும், விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும், ஒட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.