அமமுக நினைத்தது ஒன்னு... நடந்தது ஒன்னு... எங்க போய் முடியுமோ?
சென்னை: அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. கொள்கையில் முரண்பட்ட கட்சிகள் கூட கூட்டணி சேர்ந்துள்ளன. அதற்கு பல்வேறு விளக்கங்களை கொடுக்க அந்தந்த கட்சி தலைவர்கள் தவறவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என ரஜினிகாந்த் பின்வாங்க, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனோ தனியே தேர்தலை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.
சீமானும் அதே நிலைப்பாட்டினை எடுத்துள்ளார். மதிமுக, விசிக மற்றும் கம்பியூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் மும்முரமாக உள்ளன. இப்படி ஒவ்வொரு கட்சியும் அனல் வேகத்தில் தேர்தல் பணியை செய்து வருகின்றன.
குழப்பத்தில் அமமுக?
ஓட்டப்பந்தயத்தில் மெதுவாக ஓடி வந்து, வேகமெடுப்பது போல், அமமுக கட்சி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. முக்கிய தேசிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து விட்ட நிலையில், குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு வலைவீசி வருகிறது அமமுக. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற குழப்பத்தில் உள்ள அமமுகவிற்கு, கூட்டணி மற்றொரு தலைவலியாக போய்விட்டதாக சொல்லப்படுகிறது.
அரசியல்வட்டாரத்தில் கிசுகிசு
நினைத்தது ஒன்னு, நடந்தது ஒன்னாக அமமுகவிற்கு போய் கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. முதலில், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று டிடிவி தினகரம் சொல்லி வந்த நிலையில், மாநில கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் கணக்கு தப்பாகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்துவிட்ட நிலையில், தேமுதிகவை இழுப்பதில் திமுகவும், அதிமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளது.
வெற்றிவேல் தலைமையில் பேச்சு
அமமுக தனித்து நிற்குமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் ஆதரவு?
அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணைத் தலைவர் முனீர், பொதுச்செயலாளர் சித்திக், துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி, பொருளாளர் பிர்தவ்ஸ்,மாநில செயலாளர்கள் அபுபைசல், இக்பால் ஆகியோர் உடன் இருந்தனர்.