"அவர்" இவரை பார்க்கிறார்.. "இவர்" அவரை பார்க்கிறார்.. இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. உசிலம்பட்டி பரபரப்பு
அமமுக பிரமுகரை திமுக முக்கிய புள்ளி சந்தித்து பேசியுள்ளார்
சென்னை: திமுக பிரமுகர் ஒருவர், அமமுகவின் விஐபியை சந்தித்து பேசியுள்ளார்.. சால்வையும் போர்த்தியுள்ளார்.. இதுதான் மதுரை மாவட்ட அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர போகிறது.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக வழக்கம்போல் போட்டியிட வியூகங்களை அமைத்து வருகின்றன.
இதில், அமமுகவின் பிளான் என்னவென்று தெரியவில்லை.. சமீபத்தில் டிடிவி தினகரன் டெல்லி சென்று வந்தார்.. ஒருவேளை அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் முயற்சியில் அக்கட்சி உள்ளதா என்று வெளிப்படையாக தெரியவில்லை. அதேசமயம், ஓபிஎஸ்-ம் அவரது மகனும் பாஜகவின் தீவிர விசுவாசிகள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இப்போது நடந்து வரும் உட்கட்சி விவகாரத்தில்கூட, பாஜகவின் அழுத்தம் இருக்கிறதோ, அல்லது அமமுக அதிமுகவின் சேரும் முயற்சியோ என்றுகூட உறுதியாக தெரியவில்லை.. இப்படிப்பட்ட சமயத்தில், திமுக புள்ளி, அமமுக பிரபலத்தை சந்தித்து பேசியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக இருப்பவர் மகேந்திரன்... இவர் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுகவின் அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்... இவரை திமுகவின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளரும், உசிலம்பட்டி ஒன்றிய பெருந்தலைவருமான சுதந்தரம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது சால்வை அணிவித்து வாழ்த்து சொல்லி உள்ளார்.. ஸ்வீட்டையும் தந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இதுபோலவே, திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவியும் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து சொல்லி உள்ளார்.
இதுதான் சலசலப்பை கிளப்பி உள்ளது.. ஏற்கனவே அமமுகவில் இருந்துதான் திமுகவுக்கு சென்றால் தங்க தமிழ்செல்வன்.. மேலும், தன் ஆதரவாளரையும் திமுகவுக்கு திருப்பும் முயற்சியில் இறங்கி வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருவேளை இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பா? அல்லது அரசியல் நாகரீகமா என்றும் தெரியவில்லை.
ஆனால், உடன் பிறப்புகளிடையே சலசலப்பு கிளம்பி உள்ளது.. அமமுகவின் மகேந்திரன் எம்எல்ஏ-வாக நிற்க வாய்ப்பு இருக்கு.. அப்படி நின்றால், திமுகவினர் எப்படி வேலை செய்ய முடியும்? என்பதே அவர்களின் குழப்பமாக உள்ளது.. அமமுக, தாய்க்கழகத்துடன் இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், உசிலம்பட்டியில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததன் காரணம் இன்னும் பிடிபடவே இல்லை!