ஆர்.கே நகர் அடையாளம் தகர்ந்தது தினகரனுக்கு; மக்களவை தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
Recommended Video
சென்னை: ஆர்.கே நகர் அடையாளம் தகர்ந்து போய் விட்டது தினகரனுக்கு. அவரது கட்சி ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியை போல தமிழகம் முழுவதும் அமமுக பெறும் என டி.டி.வி தினகரன் எப்போதும் கூறி வருகிறார். இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆர்.கே நகர் பகுதியில் அமமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் ஆர்.கே நகர் அமமுகவின் கோட்டை என்ற அடையாளம் தகர்ந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுற்றதால் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மது சூதனனும் போட்டியிட்டனர். ஆனால் அங்கு பணமழை பொழிகிறது என்று காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது முதலமைச்சர் ஈபிஎஸ் முதல் அனைத்து அமைச்சர்களும் தினகரனுக்காக மாய்ந்து மாய்ந்து வேலை செய்தனர்.
அதன் பின்னர் காட்சிகள் மாறின. எந்த தினகரனுக்காக அரசு இயந்திரமே இரவு பகல் பாராமல் பணி செய்ததோ, எந்த தினகரனுக்காக முதலமைச்சர் கால் கடுக்க நின்று பிரச்சாரம் செய்தாரோ அந்த தினகரனை அதிமுகவில் இருந்து தூக்கி எறிந்தார்கள். ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவால் கைகளை இணைத்து சேர்த்து வைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கப்படுமா? தீர்ப்பாயம் அமைத்தது மத்திய அரசு தீர்ப்பாயம்
அதன் பின்னர் மீண்டும் ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. தினகரன் இம்முறையும் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு முன்பு ஒதுக்கிய தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை மாறாக குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஈபிஸ் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்து விட்டது. ஆனால் இறுதியில் அதிமுகவை புறம்தள்ளி, திமுகவை டெப்பாசிட் இழக்கச் செய்து தினகரன் பெருவெற்றி பெற்றார்.
இந்த வெற்றி 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பெற்ற வெற்றி என்று அதிமுக, திமுக முதல் அனைத்து தரப்பினரும் விமர்சித்து வந்தனர். ஆனால் தினகரனோ இந்த வெற்றி மூலம் அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்களுடன்தான் இருக்கின்றனர் என்றும் தமிழகம் முழுவதும் அமமுக இத்தகைய வெற்றியைப் பெறும் என்றும் தொடர்ந்து கூறி வந்தார். திமுக டெப்பாசிட்டை பறிகொடுத்ததை வாண்டடாக வண்டியில் ஏறி வம்பிழுத்து வந்தார்.
இந்த நிலையில் மக்களவை தேர்தல் வந்தது. அப்போதும் பிரச்சாரம் செய்த தினகரன் திமுகவை தொடர்ந்து சீண்டி வந்தார். ஆர்.கே நகர் வெற்றி தமிழகம் முழுவதும் தங்களுக்கு உரித்தாகும் எனவும் , இந்த தேர்தலில் உணமையான அதிமுக தொண்டர்கள் தங்களையே ஆதரிப்பார்கள் என்றும் கூறி வந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியான காட்சிகளை கொண்டு வந்தன.
4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் வாட சென்னை தொகுதியை கைப்பற்றினார். தினகரனும் வடசென்னை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார், இருந்தாலும் ஆர்.கே நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வாக்குகள் வெறும் 10 ஆயிரத்து 551 மட்டுமே. ஆனால் திமுக அணி மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 227 வாக்குகளை பெற்றுள்ளது.
அதிமுக அணி 21 ஆயிரத்து 920 வாக்குகளை பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக மக்களவை தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கியுள்ளது. இதனால் தினகரன் இனிமேல் ஆர்.கே நகரை உதாரணம் காட்டிப் பேசுவாரா என்பது போகப் போக தெரியும்.