எம்எல்ஏ, எம்பி தேர்தலில் விட்டதை பிடிக்கும் அமமுக .. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 3 இடங்களில் வெற்றி
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 3 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
156 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் என மொத்தம் 45,336 இடங்களுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
வாக்குப் பதிவு
அது போல் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் என மொத்தம் 46,639 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அமமுக வெற்றி
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அமமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 2ஆவது வார்டில் சவிதாவும் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 1ஆவது வார்டில் விஜயலட்சுமியும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய 1ஆவது வார்டில் மருதையம்மாளும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அமமுக என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இதையடுத்து கடந்த 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.
சட்டசபை தொகுதி
அது போல் தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அக்கட்சி ஒரு இடத்தையும் பெறவில்லை. இதனால் அமமுகவுக்கு இறுதி தீர்ப்பு எழுதப்பட்டதாகவே பேசப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அமமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.