அமமுகவை சகட்டு மேனிக்கு விளாசிய அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியே கிடையாது என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், படுதோல்வியை சந்தித்தது. எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாததோடு, ஓட்டு விகிதமும் மிகவும் சரிந்துவிட்டது.
இந்த நிலையில், சென்னையில், இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:
ஸ்வீட் எடு கொண்டாடு.. வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!
அதிமுக திரும்புங்கள்
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது ஒரு கட்சியே கிடையாது. அதை ஒரு குழு என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம். அது ஒரு லெட்டர் பேடு கட்சி. கடலில் கரைத்த பெருங்காயம் போல அதன் நிலைமை மாறிவிட்டது.
7 தமிழர் விடுதலை
தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும். சஞ்சய்தத் வழக்கு என்பது வேறு, 7 தமிழர் விடுதலை என்பது வேறு, எனவே இரண்டையும் ஒன்றாக கருத முடியாது.
கூடங்குளம் அணுக்கழிவு
கூடங்குளம் அணுக்கழிவு திட்ட விவகாரத்தில், ஜூலை 10 ஆம் தேதியன்று, பொதுமக்களின் கருத்து கேட்புக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பொதுமக்கள்தான், அதில் கருத்து சொல்ல வேண்டுமே தவிர, நாங்கள் அதற்கு முன்பாக கருத்து சொல்வது சரியாக இருக்காது.
பாரதியார் தலைப்பாகை
பாரதியார் தலைப்பாகை தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. அதுவே போதும் என்று நினைக்கிறேன். கோடைக்கால வறட்சியாக இருந்தாலும், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளமாக இருந்தாலும், சிறப்பாக அவற்றை கையாண்டது இந்த அரசுதான். ஏற்கனவே முதலமைச்சர் ஆய்வு நடத்தி குடிநீர் பஞ்சம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மரங்களை அதிகமாக நடுங்கள், மழை பெய்ய வேண்டும் என்று, இறைவனை, வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.