அமமுகவில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நிர்வாகிகள்... அமைப்புச் செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்
Recommended Video
சென்னை: அமமுகவின் அமைப்புச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளருமான சிவா ராஜமாணிக்கம் அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்துவிட்டார்.
டெல்டா மாவட்ட அமமுக நிர்வாகிகளில் சிவா ராஜமாணிக்கம் மிக முக்கியமானவராக கருதப்பட்ட நிலையில் அவரும் தினகரன் முகாமில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் தினகரன் மிகவும் நொந்து போனதுடன், கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து வருகிறார்.
அமைப்புச் செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த திருவாரூர் சிவா ராஜமாணிக்கம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வு டெல்டா மாவட்ட அமமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகிகள் வியப்பு
அமமுக அமைப்புச் செயலாளர் பதவியுடன் டெல்டா மண்டல பொறுப்பாளர் பதவியையும் கூடுதலாக கையில் வைத்திருந்தார் சிவா ராஜமாணிக்கம். இவர் டிடிவி தினகரனின் வலதுகரமாக செயல்பட்டவர் என்பதால் இவரது விலகலை மிரட்சியுடனே பார்க்கின்றனர் டெல்டா மாவட்ட அமமுகவினர்.
அதிமுகவில் ஐக்கியம்
தினகரன் மீது கொண்ட அதிருப்தி காரணமாக இவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவது என சில வாரங்களுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டாராம். இதனிடையே சசிகலா தம்பி திவாகரன் கொடுத்த ஆலோசனைப்படி தான் மீண்டும் அதிமுகவில் சேர முடிவெடுத்துள்ளார். அமைச்சர் காமராஜ் அவரை சென்னைக்கு அழைத்து வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துள்ளார்.
காரணம் என்ன?
இதனிடையே இது தொடர்பாக, தினகரனை நம்பிச் சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய போது, டிடிவி சார் சரியா தான் போயிட்டு இருக்காரு, ஆனாலும் ஏன் இப்படி ஒரு சில நிர்வாகிகள் விலகுகிறார்கள் என எங்களுக்கு புலப்படவில்லை. சார் கலக்கம் அடைந்த மாதிரி தான் தெரியுது. பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.