ஆஹா.. அமமுகவில் அடுத்த வெயிட் விக்கெட் காலி?.. தெற்கிலிருந்து வரும் ஷாக் செய்தி!
இசக்கி சுப்பையா அதிமுகவுக்கு தாவ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.
சென்னை: அமமுகவின் தலையில் இடி வந்து விழுந்துள்ளது.. கட்சியின் அடுத்த வெயிட்டான டிக்கெட் விழ போகுது என்ற தகவல்தான்!
ரிசல்ட் வந்த பிறகு ஏன் தோற்றோம் என்று கூடி ஆலோசனை ஒன்று அமமுக தரப்பில் நடத்தப்பட்டது. இதில், பூத் பஞ்சாயத்து, ஓட்டு மிஷின் குளறுபடி, குக்கர், தொப்பி கிடைக்காதது, தாமதமாக கிடைத்த சின்னம் என பல குறைகள் பேசப்பட்டது.
இவை எல்லாம் ஓபனாக தலைமையிடம் சொல்லப்பட்டாலும், மனதளவில் ஏதோ ஒரு நம்பிக்கை குறைந்துவிட்டது போலவே தெரிகிறது. அதனால்தான் கட்சி மாறுவது என்பது ரொம்ப சாதாரணமாக நடக்க ஆரம்பித்துள்ளது. முன்பெல்லாம் அதிமுகவில் வலிய வலிய வந்து இணையும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரிசல்ட்டுக்கு பிறகு நிலைமையே வேற.
தென்சென்னை
அமமுகவிலேயே கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை அதிமுகவும் நல்லாவே பயன்படுத்தி கொண்டு வருகிறது. இப்போதான் மைக்கேல் ராயப்பன் அந்த பக்கம் போனார், அதற்குள் அடுத்த விக்கெட் விழ போகிறது! அது வேறு யாருமில்லை.. தென்சென்னையில் போட்டியிட்ட இசக்கி சுப்பையாதான்.
நெருக்கம்
இவர் கட்சியின் மிக முக்கியமான நிர்வாகி ஆவார். இன்னும் சொல்ல போனால், கிட்டத்தட்ட தங்க தமிழ்செல்வன் போல தினகரனிடம் நெருக்கமாக இருப்பவர். இதைவிட ஓபனாக சொல்லப்போனால், முன்பு செந்தில் பாலாஜி என்ற "பசை பார்ட்டி" இருந்த இடத்தை பூர்த்தி செய்து வருபவர் இசக்கி சுப்பையாதான்.
வளமானவர்
இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு, இப்போதுள்ள உள்ள அமமுக ஆபீஸ் இருப்பதே இசக்கியின் சொந்த இடத்தில்தான். அந்த அளவுக்கு வளமானவர்! இந்த குணம்தான் தினகரனை கவர்ந்தது. இதே குணம்தான் அதிமுகவையும் இழுத்துள்ளது. இப்போது இசக்கியை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்கிறதாம்.
செந்தில்பாலாஜி
தென்சென்னையில் இவர் தோற்று போனாலும், தினரகனின் சில செயல்பாடுகளும், கருத்துகளும் இசக்கிக்கு பெரிய அளவில் நம்பிக்கை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இவர் அதிமுகவுக்கு சென்றால், அங்கு இவரை எடப்பாடி தரப்பு நன்றாக பயன்படுத்தி கொள்ளும். செந்தில்பாலாஜியை எப்படி திமுக அரவணைத்து, மரியாதை தந்து பெரிய பொறுப்பில் வைத்துள்ளதோ, அதுபோலவே இசக்கியையும் அதிமுக பயன்படுத்தி கொள்ளும் என்றே தெரிகிறது.
தாய்க்கழகம்
அப்படியே அதிமுகவுக்கு இசக்கி போய்விட்டாலும் சும்மா இருக்க மாட்டார். எப்படியும் தன் பலத்தை காட்டவோ, அல்லது தினகரனுக்கு படிப்பினையை தரவோ, ஆதரவாளர்களையும் அழைத்து கொண்டே தாய்க்கழகத்துக்கு போய் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இதனை ஓரளவு உறுதிபடுத்துவதுபோலவே இசக்கியின் குற்றாலம் கூட்டம் அமைந்துள்ளது. குற்றாலத்தில் உள்ள இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான இசக்கி ரிசார்ஸில் கூடிய இசக்கி ஆதரவாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். நெல்லை மாவட்ட அமமுக சார்பில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்டோடர் இதில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அதிமுகவில் இணைவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சசிகலா
இசக்கி சுப்பையா வெளியேறினால் நிச்சயம் அது தினகரனுக்கு நஷ்டம் தான். சசிகலா வருவதற்குள் அமமுக முழுமையாக கரைந்து போய் விடுமோ !