உடல்நலம் தேறி வரும் சசிகலா... சர்வமத வழிபாடு நடத்திய அமமுக நிர்வாகிகள்..!
சென்னை: சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட அமமுக நிர்வாகிகள் சர்வமத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா சுவாசப் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர் விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான அறிகுறிகளும் குறைந்துவிட்டன. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியுடன் அவர் நடப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.
இந்த சூழலில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதி அமமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் துளசி சேகரன் மற்றும் என்.எஸ்.என்.அப்துல்லா ஆகியோர், சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டி, கடந்த இரண்டு நாட்களாக சர்வமத வழிபாடு நடத்தினர். மணப்பாறை அருகே உள்ள மட்டபாறைப்பட்டி கோயில் மற்றும் இளங்காகுறிச்சியில் உள்ள தர்ஹாவில் சசிகலாவுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது.
மேலும், சசிகலாவுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது. சசிகலாவின் தமிழக வருகையை ஆவலோடு எதிர்நோக்கியுள்ள அமமுகவினர் அவருக்கு அவருடைய வயதை குறிக்கும் வகையில் 66 இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். ஒசூரில் தொடங்கி சென்னை மெரினா ஜெயலலிதா நினைவிடம் வரை 66 இடங்களை தேர்வு செய்து அது குறித்த தகவலை டிடிவி தினகரன் தரப்பிலிருந்து நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.