பகவத் கீதையும்... திருக்குறளும் வேறுவேறு இல்லையாம்... டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் தத்துவயியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். பகவத்கீதையை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நேற்று போராட்டம் நடத்திய நிலையில், மத்திய அரசின் முடிவை வரவேற்று பேசியுள்ளார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனின் பேட்டி குறித்து கருத்துக் கூறும் அரசியல் நோக்கர்கள், பாஜகவை விட திமுக மீதே தினகரனின் கோபம் அதிகம் இருப்பதை அவர் பேட்டி உணர்த்துவதாகவும், அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை பிரித்துச்சென்றதால் ஸ்டாலின் மீது தினகரன் கோபம் கொண்டிருக்கிறார் போல எனவும் தெரிவிக்கின்றனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த தினகரனின் செயல்பாட்டில் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
பகவத்கீதையை அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்ப்பதை வரவேற்றுள்ளதன் மூலம் பாஜக தலைமைக்கு தினகரன் சிக்னல் அளிக்கிறாரா என்ற கோணத்திலும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக உள்ளது. இதனிடையே பகவத்கீதை திருக்குறளை போன்றது என்றும், அதில் மதச்சாயம் பூச வேண்டாம் எனவும் தினகரன் கூறியிருக்கிறார். மேலும், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள வடமாநில மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
பொதுவாக, மத விவகாரங்களில் பொதுவெளியில் கருத்துக்கூறுவதை தவிர்ப்பது தினகரன் வழக்கம். இந்நிலையில், பகவத்கீதை விவகாரத்தில் அவர் மத்திய அரசை ஆதரிப்பது பாஜகவினரை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.