கொரோனா தடுப்பு பணிகள்... அரசு ''ஏனோதானோவென்று'' நடந்து கொள்ளக்கூடாது - டிடிவி தினகரன்
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு ''ஏனோதானோவென்று'' நடந்துக் கொள்ள கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வதால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதும், எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்வதும் தமக்கு கவலையளிப்பதாக தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 19,255 பேர் மட்டுமே முழுமையாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கொரோனாவை தடுப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை மையங்கள் அரசு மற்றும் தனியார் என இரண்டு பிரிவுகளிலும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ரேண்டம் சாம்பிள் முறையில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்ற தகவல்கள் தமக்கு வருவதாகவும், நோய்தொற்று ஏற்பட்டு கண்டெயின்மெண்ட்டில் உள்ள பகுதிகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். சென்னையில் வீடுகளில் பெயர், வயது போன்ற ஒன்றிரண்டு மேலோட்டமான கேள்விகளோடு நோய் கண்டறிதலுக்கான கணக்கெடுப்பு முடித்துக் கொள்ளப்படுவதாகவும், இந்த கணக்கெடுப்பை சோதனை என சென்னை மாநகராட்சி கூறுவது சரியான நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ள நிலையில் நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முழு வீச்சில் எல்லா பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.