அதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்
சென்னை: அதிமுகவை மீட்டெடுக்கும் புனிதமான இலக்கை நோக்கி பயணிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்கவிழா நாளை நடைபெறும் நிலையில், தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், திமுக எனும் தீயசக்தியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற அக்டோபர் மாதம் 17-ம் தேதி அதிமுகவை எம்.ஜி.ஆர்.உருவாக்கினார் எனக்கூறியுள்ளார். அவர் மறைவுக்கு அண்ணா திமுக அவ்வளவு தான் என சிலர் மனப்பால் குடித்த நிலையில், அதிமுகவை கட்டிக்காப்பாற்றி மூன்றாவது பெரிய கட்சியாக ஜெயலலிதா மாற்றினார் எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்து மீண்டும் கட்சியில் இருள் சூழ்ந்தபோது, தன் சொந்த நலன் பாராது தமிழகத்தின் நலனை மனதில் வைத்து ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா வழங்கியதாகவும், ஆனால் அவர் துரோகமே வடிவான சூது மதியாளராக இருக்கிறார் எனவும் சாடியுள்ளார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எல்லாம் சுயநலத்திற்காக தலைவாசலை திறந்துவிட்டு துரோகம் இழைத்து வருவதாக விமர்சித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு அதிமுகவை மீட்டெடுத்தே தீருவோம் என்று உறுதிபடத்தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். மேலும், ஜெயலலிதாவின் உண்மையான வழித்தோன்றல்களாக செயல்பட்டு மக்கள் மனங்களை வென்றெடுப்போம் என சபதமேற்றுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு அ.தி.மு.கவை மீட்டெடுத்தே தீருவோம்!
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 16, 2019
அம்மாவின் உண்மையான வழித்தோன்றல்களாக தமிழ்நாட்டு
மக்களின் மனங்களை வென்றெடுப்போம்!
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்
தொண்டர்களான, கழக உடன்பிறப்புகளுக்கு…. pic.twitter.com/c1ylZcRMcX
தம்மை மொத்தமாக வீழ்த்திவிடலாம் என சிலர் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மிட்டாய்காட்டி குழந்தைகளை பிடிப்பது போல் அமமுகவில் இருந்து சில பலவீனர்களை பிடித்துச் சென்று பூச்சாண்டி காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ள டிடிவி, இதற்கெல்லாம் அஞ்சி பின்னடையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.