திமுக போல் நாங்கள் வறட்டு வாதம் செய்யவில்லை... புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க காரணம் கூறும் தினகரன்
சென்னை: புதியக் கல்விக்கொள்கையை அரசியலுக்காக தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்ப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!
தாய்மொழி கல்வி
கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில் அவசரமாக புதிய கல்விகொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி குறைகளை சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதே சரியாக இருக்கும். அப்படி வரும்போது குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்பதை 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்விதான் என்று அறிவிக்க வேண்டும்.
மூன்றாவது மொழி
மும்மொழிகொள்கையைப் போன்றே புதிய கல்விகொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும், உலக அளவிலான பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும். மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே (Optional) என்றிருக்க வேண்டும். அப்படி மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விரும்பும் மொழியாகவே இருக்க வேண்டும்.
ஏற்க முடியாது
எந்த ஒரு மொழியும் நமக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அதே நேரத்தில், நம்முடைய தாய்மொழியை அழுத்திவிட்டு எந்த மொழியை உயர்த்திப் பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது என்றும் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழிகளை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சிக்குப் பதிலாக, தாய்மொழிகளை உயர்த்திப்பிடிப்பதே வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.
முதல் பணி
பாடச்சுமை குறைக்கப்பட்டு மாணவர்கள் சுயமாக சிந்தித்து கற்பதற்கான வாய்ப்புகளைத் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்குவது பாராட்டத்தக்கது. ஆனால், போதுமான கழிப்பறைகளோ, வகுப்பறைகளோ இல்லாத பள்ளிக்கூடங்கள் அதிகமிருக்கும் நாட்டில் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே முதல் பணியாக இருக்க வேண்டும்.
எப்படி சரியாக இருக்கும்?
பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் போன்றவற்றை எல்லாம் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, இவற்றுக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கும் வேலைகளை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? இது, ‘நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி எடுத்து வா. இருவரும் ஊதி சாப்பிடலாம்' என்ற பழமொழியைப் போல இருக்கிறது.
கல்வி வளர்ச்சி
பல்வேறு வகையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, உட்கட்டமைப்பு வசதி கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில சூழலுக்கும், கல்வி வளர்ச்சியில் அந்தந்த மாநிலங்கள் பெற்றிருக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் தேவைக்கு ஏற்பவும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்களைச் செய்து கொள்வதற்கான உரிமை மாநில அரசுகளுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் கூடிய தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் இல்லை
தி.மு.கவைப் போல வறட்டு வாதத்திற்காகவோ, அரசியலுக்காவோ நாங்கள் கண்களை மூடிக்கொண்டு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கவில்லை; அதைப் போல ஒரேயடியாக ஆதரிக்கவும் இல்லை. கல்வி என்பது மாணவர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் சார்ந்தது; இதில் அரசியலுக்காக நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் கல்விக்கொள்கையிலுள்ள குறைகளையும், அதற்காக செய்ய வேண்டிய திருத்தங்களையும், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியவற்றையும் ஏற்கனவே தெளிவாக முன் வைத்திருக்கிறோம்.