திசைமாறுகிறாரா டிடிவி தினகரன்... மவுனம் காப்பதன் ரகசியம் என்ன?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடியுரிமைச் சட்டம் விவகாரத்தில் அமைதி காத்து வருவது அவரது கட்சியினரை குழப்பமடையச் செய்துள்ளது.
நாடு முழுவதும் பற்றி எரியும் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில், டிடிவி தினகரன் இதுவரை எந்தக் கருத்தையும் கூறாததும், போராட்டத்தை முன்னெடுக்காததும் அவரது பாதை எதை நோக்கி என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவுக்கு எதிராக பாய்ச்சலில் ஈடுபட்ட தினகரன் இப்போது மத்திய அரசுக்கு எதிராக வாய்திறப்பதே இல்லை.
அரசியல்
அதிமுகவுக்கு எதிராக அமமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தினகரன், தொடக்ககாலத்தில் பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தார். ஆனால் அண்மைக்காலமாக அவரது அந்த செயல்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் மிகுந்த மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
ஆதரவு குரல்
அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பதில் தவறேதும் இல்லை என்று தினகரன் எப்போது கூறத் தொடங்கினாரோ அன்று முதல் அவரது அரசியல் பாதையும் மாறத் தொடங்கியது. மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரலை மெல்ல குறைத்து இப்போது அமைதியாகவே ஆகிவிட்டார்.
குடியுரிமைச் சட்டம்
குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தும், எதிர்ப்புகளை பதிவு செய்தும் வருகின்றன. தன்னை மதச்சார்பற்றவர் என முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன், இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காதது அவரது கட்சியில் உள்ள நிர்வாகிகளையே குழப்பமடையச் செய்துள்ளது.
தவறவிட்டார்
குடியுரிமைச் சட்டத்தை அதிமுக எம்.பி.க்கள் ஆதரித்ததால் அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், அதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தினகரன் செயல்படுவார் என எதிர்பார்த்த நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தினகரனின் சைலண்ட் மோடு பற்றி விசாரித்தால், சசிகலா அறிவுறுத்தல் இல்லாமல் அவர் எதையும் செய்யமாட்டார் என்று மட்டும் பதில் கிடைத்தது.