வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் பண்ணப் போகுது அதிமுக.. வெற்றிவேல் பகீர் புகார்
பாதுகாப்பு பலத்தப்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் அமமுக மனு அளித்துள்ளது
சென்னை: "வாக்கு எண்ணிக்கையை நிறுத்த அதிமுக கலவரம் செய்ய நினைக்கிறார்கள். அதனால் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தேர்தல் அதிகாரியிடம் மனு தந்துள்ளோம்" என்று அமமுக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்
மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, நாளை நடக்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுக, திமுக, அமமுக தரப்பில் தங்களுடைய கட்சிகளுடைய முகவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
வேண்டுகோள்
மேலும், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை திமுகவின் மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று இருவரும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
கூடுதல் பாதுகாப்பு
இந்நிலையில் அமமுக தரப்பிலும் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
துணை ராணுவ படை
இதற்கான மனுவை அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வழங்கினார். அந்த மனுவில், "அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். கூடுதல் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். வாக்கு எண்ணிக்கை குளறுபடி இல்லாமல் நடுநிலையோடு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
வாக்கு எண்ணிக்கை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆர்கே. நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது நிறைய பிரச்சனைகள் முதல் 2 மணி நேரம் நடந்தது. வாக்கு இயந்திரத்தை அதிமுகவினர் உடைக்கவே போய்விட்டனர். அங்கிருந்தவர்களை அடிக்கவும் போய்விட்டனர். அதனால்தான் நாளை கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளோம்.
தோல்வி பயம்
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த அதிமுக கலவரம் செய்ய நினைக்கிறார்கள். எங்கெல்லாம் அவர்களுக்கு ஓட்டுகள் குறைகிறதோ, தோற்று விடுவோம் என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்வார்கள்" என்றார்.