அதே சென்னை ராயப்பேட்டை ஏரியாவில்தான்... அமமுக மண்டல வாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: அதிமுகவின் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் காரசாரமாய் வெடித்துக் கொண்டிருந்த அதே சென்னை ராயப்பேட்டையில் அமைதியாக நடைபெற்று கொண்டிருக்கிறது டிடிவி தினகரனின் அமமுக மண்டலவாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த சிறைவாசம் அடுத்த ஜனவரி 27-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் அதிமுகவில் சசிகலாவுக்கு யார் விசுவாசமாக இருக்கப் போகிறோம்? யார் சசிகலாவை உறுதியாக எதிர்க்கப் போகிறோம்? என்கிற போட்டியே நிலவுகிறது. சசிகலாவை அதிமுகவுக்குள் நுழையவே விடமாட்டோம் என ஒருதரப்பும்; சின்னம்மா இல்லாமலா கட்சி என இன்னொருதரப்பும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாகத்தான் அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் படுகாரசாரமாக சுமார் 5 மணிநேரம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மண்டல வாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
இந்த மா.செ.க்கள் கூட்டம் வரும் புதன்கிழமை வரை நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தை வெற்றிவேல், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் தலைமை ஏற்று வழிநடத்தினர். இதில் அமமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து வலியுறுத்தினார் வெற்றிவேல் என்கின்றன தகவல்கள்.