பாஜக அரசகுமாரின் பேச்சு... சசிகலா சொன்ன ஆரூடம்.. மீண்டும் பரபரப்பு களமாகிறதா தமிழக அரசியல் களம்?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என பாஜக துணைத் தலைவர் அரசகுமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த தினகரனிடம் சசிகலா சொன்ன ஆரூடமும் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகப் போகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளன.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவினர் அவரது பின்னால்தான் செல்வார்கள்; அவரது கட்சியில்தான் ஐக்கியமாவார்கள் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். சசிகலாவை சுப்பிரமணியன் சுவாமி திடீரென ஏன் ஆதரிக்கிறார் என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக விரைவில் பதவி ஏற்பார் என பேசினார். அவருக்கு முன்னதாக பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் ஸ்டாலினை பாராட்டி பேசியிருந்தார். பாஜகவினர் தொடர்ந்து இப்படி பேசிவருவதும் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.
பெரம்பலூரில் கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு.. தனித்தீவான 10 கிராமங்கள்
சிறைக்கு போவார்கள்..
இதனிடையே பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் தினகரனிடம் சசிகலா குறிப்பிட்ட சில செய்திகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தினகரனிடம் பேசிய சசிகலா, விரைவில் வெளியே வந்துவிடுவேன். நமக்கு துரோகம் செய்தவர்கள் சிறைக்குப் போகப் போகிறார்கள்... அமைதியாக இருங்கள் என கூறியிருக்கிறார்.
சசிகலா விரைவில் விடுதலை?
இதனையடுத்து சசிகலா வரும் பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையாகி விடுவார் என அமமுகவினர் நம்பிக்கையோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் கூட்டணியில் பாஜக இருப்பதை விரும்பாமல்தான் இருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி விரிசல்
ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகவை விலக்கியே வைத்திருக்கிறது அதிமுக. அண்மையில் உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
அதிமுக அரசு மீது விமர்சனம்
இதற்கு தமிழக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அதிமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது. மேலும் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் பாஜக கூறியது.
பாஜகவுக்கு அதிமுக செக்?
உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவும் மேயர் பதவிகளை கேட்டதாலேயே இப்படி ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து அக்கட்சிக்கு செக் வைத்துவிட்டது என்பது பொதுவான கருத்து. ஒருபக்கம் அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய விரிசல்.. இன்னொரு பக்கம் துரோகிகள் சிறைக்குப் போவார்கள் என்கிற சசிகலாவின் ஆரூடம்.. பாஜகவினரின் திமுக ஆதரவு பேச்சுகள் என ஒவ்வொருநாளும் பரபரப்பை ஏற்படுத்துகின்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக போகிறதா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.