பச்சை துரோகம்.. இதுக்கு அதிமுகவுக்கே போயிருக்கலாம்.. செ. பாலாஜி மீது பாயும் அமமுக!
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியின் செயல் பச்சை துரோகம் என அமமுகவைச் சேர்ந்த வா. புகழேந்தி மற்றும் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அமமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று தனது தொண்டர்களுடன் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் அமமுக கட்சியை ஆரம்பித்த பிறகு அக்கட்சியில் இருந்து விலகி செல்லும் முக்கிய தலைவர்களில் ஒருவராக செந்தில் பாலாஜி பார்க்கப்படுகிறார். அவரது பிரிவு அமமுகவில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகழேந்தி மற்றும் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
துரோகச் செயல்
இது தொடர்பாக அமமுகவின் முக்கிய நிர்வாகி வா புகழேந்தி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு பலர் வந்து இருக்கிறார்கள்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு செந்தில் பாலாஜி உறுதுணையாக இருந்தார். இன்றைய தினம் அவர் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சென்று இருக்கிறார். ஒரு முறை செயற்குழு நடந்தது. அதில் நடந்த விஷயங்களை இப்போது சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது.
ஜெ.வுக்கு துரோகம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழுவில், செந்தில் பாலாஜி என்னவெல்லாம் துரோகம் செய்தார், எப்படிப்பட்ட மனிதர் என்பதை, ஜெயலலிதா தெளிவாக சொன்னார். அதனை நிரூபிக்கும் வகையில் இன்றைக்கு செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவுக்குத் தேவையா
திமுகவிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான், இனி கரூர் பாலாஜியை வைத்து தான், கரூரிலும், அரவக்குறிச்சியிலும் திமுக தலை நிமிர்ந்து நிற்கப்போகிறதா என்பதுக்கு பதில் சொல்ல வேண்டும். அவ்வளவு பலவீனமாக திமுக இருக்கிறதா என்று திமுக நிர்வாகிகள் புலம்புவதையும் பார்க்க முடிகிறது, செந்தில் பாலாஜி செய்தது பச்சை துரோகம் என்றார்.
எங்களுக்கு பலவீனம் இல்லை
தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியில், "செந்தில் பாலாஜி சேர்ந்து இருப்பதால் திமுக பலம் பெறாது. அதேநேரம் அவர் விலகி இருப்பதால் அமமுக பலவீனம் அடையாது. இதெல்லாம் இரண்டு நாளைக்கு ஊடகங்களில் பரபரப்பாக காட்டுவார்கள். செந்தில் பாலாஜி கணக்கு போட்டு திமுக சென்றுள்ளார். அவர் திமுகவில் இணைந்ததுக்கு பதில் அதிமுகவிலேயே இணைந்திருக்கலாம்" என்றார்.
வைகை செல்வன் கருத்து
இதற்கிடையே அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், "அதிமுகவில் இணைந்தால் தனக்கு பழைய செல்வாக்கு திரும்ப வருமா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். அதனால் தான் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். மீண்டும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு தரும் என்று நம்புகிறார். இதன் மூலம் அங்கு வென்று மீண்டும் அமைச்சராகலாம் என்று கனவு காண்கிறார். அந்த கனவில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார்" என்றார்.