Exclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி
சென்னை: காசு, பணத்தை எதிர்பார்த்து அ.ம.மு.க.வில் தாம் இல்லை என்றும், நம்பக்கூடாத சிலரை டிடிவி நம்பியது தான் அவர் செய்த தவறு எனவும் அமமுக அமைப்புச் செயலாளரும், நடிகருமான செந்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: அமமுகவில் அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது, இதை வைத்து என்ன செய்வீர்கள்?
பதில்: எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவன் நான். அவர் மறைவுக்கு பிறகும் அம்மாவின் வழியில் தொடர்ந்து கட்சியில் பயணித்தேன். தமிழகம் முழுவதும் நட்சத்திரப் பேச்சாளராக அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்திருக்கிறேன். காலத்தின் தேவையால் அமமுகவை தொடங்கிய தினகரன், ஏற்கனவே என்னை அமைப்புச்செயலாளராக நியமித்திருந்தார். இந்நிலையில் இப்போது அறிவிக்கப்பட்ட புதிய பட்டியலிலும் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கிறார். அதனால் ஒரு தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் கீழிறங்கி செய்வேன்.
கேள்வி: அ.ம.மு.க.வில் என்ன தான் நடக்கிறது? தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேற என்னக் காரணம்?
பதில்: எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்பு, அம்மா அணியில் இருந்த கோவை தம்பி, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றனர். அப்போதும் இதேபோல் தான் ஜெயலலிதா அணியில் இருந்து நிர்வாகிகள் ஓட்டம் எனக் கூறப்பட்டது. ஆனால் அம்மா மீண்டெழுந்து ஆட்சியை பிடிக்கவில்லையா..அது போல் தான் இன்றும், சிலர் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் அமமுகவுக்கு வந்திருக்கக் கூடும், அது நிறைவேறாது எனத் தெரிந்தவுடன் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறேன். அதாவது வெற்றியோ, தோல்வியோ ஒரே தலைமையை ஏற்கும் பண்பு வேண்டும்.
Breaking News Live: விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுக்க செல்லும் நாசாவின் ஆர்பிட்டர்
கேள்வி: மீண்டும் சினிமா நாடகம் என்று நடிக்க தொடங்கிவிட்டீர்கள்..அப்ப கட்சிப்பணி என்னாவது?
பதில்: நடிப்பு தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது, அதை எப்படி விட முடியும். அரசியலும், சினிமாவும் எனக்கு இரண்டு கண்கள். காசு, பணத்தை எதிர்பார்த்து நான் அ.ம.மு.க.வில் இல்லை. உழைத்தால் தானே பணம் கிடைக்கும். நடிப்பு போக கட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்வேன்.
கேள்வி: அதிமுக-அமமுக இணைய வாய்ப்பு உள்ளதா?
பதில்: இந்த விஷயத்தில் சின்னம்மாவும், டிடிவியும் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் எனது முடிவும். இணைந்தால் நன்றாக தான் இருக்கும்.
கேள்வி: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பற்றி உங்கள் கருத்து?
பதில்: என்னதான் இருந்தாலும் தமிழகத்தில் அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்பதெல்லாம் மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அம்மா வழியில் ஆட்சி எனக் கூறுகிறார்கள், இதெல்லாம் கொண்டுவரச்சொல்லி அம்மாவா சொன்னார்.
கேள்வி: டிடிவி தினகரன் உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தியுள்ளாரா?
பதில்: ஆலோசனை, அறிவுறுத்தல் என்பது அரசியல் கட்சிகளில் இயல்பானது. கட்சியில் நம்பக்கூடாத சிலரை நம்பியதே தினகரன் செய்த தவறு. சிலரை நம்பி அவர்களுக்கு பொறுப்பு வழங்கி வளர்த்துவிட்டார், அவர்கள் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர்.