பரிதி இளம்வழுதி மரணம்: அமமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.. தினகரன் இரங்கல்!
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மரணமடைந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மரணமடைந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவரது மறைவை முன்னிட்டு அமமுக கட்சி சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 58.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் சட்டசபை துணை சபாநாயகராக அவர் பதவி வகித்துள்ளார். அதன்பின்னர் தி.மு.க. ஆட்சியில் இருந்த 2006-2011ம் ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருந்துள்ளார்.
பின்னர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், பின்னர் தினகரன் அணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் பரிதி இளம்வழுதியின் மரணத்திற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முன்னாள் சட்டப்பேரவை துணை தலைவரும் கழக அமைப்பு செயலாளருமான பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு அமமுக பொதுச் செயலாளர் சார்பிலும் அமமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொது வாழ்க்கையில் நெடிய பயணத்திற்கு உரியவராக திகழ்ந்து ஜெயலலிதாவின் சீரிய தலைமையினை ஏற்று தீவிர தொண்டாற்றியவர் பரிதி இளம்வழுதி. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தியாகத்திற்கும் துரோகத்திற்குமான, யுத்தத்தில் தியாகத்தின் பக்கம் அழுத்தமாய் நின்று தனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்து பணியாற்றிய அவரின் மறைவு அமமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவை முன்னிட்டு அமமுக சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். இவ்வாறு தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.