'உரிய மரியாதை உறுதி'.. தெற்கு -மேற்கில் மொத்தமாக காலியாகும் அமமுக? ஈபிஎஸ்-ஒபிஎஸ் மாஸ் பிளான்
சென்னை: பாசம் கொண்ட தம்பிகளே ஓடிவாங்க... நேசம் கொண்ட ராசக்களே ஓடிவாங்க. என பிரிந்து போன சொந்தகளை வாரி அணைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது. இணைந்த கரங்களோடு அமமுகவினரை வரவேற்று வருகிறார்கள் ஈபிஎஸ் ஒபிஎஸ். அதிமுகவுக்கு வரும் அமமுகவினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என உறுதியும் அளித்துள்ளார்கள். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அமமுகவை இணைத்து பழைய பலத்தோடு தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்கள்
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. எனினும் இடைத்தேர்தலில் மட்டும் 9 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதேநேரம் எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் துரோகம் செய்துவிட்டதாக கூறி அமமுக என்று தனி கட்சி ஆரம்பித்த டிடிவி.தினகரன் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலைக்கு அமமுகவினர் தள்ளப்பட்டனர். மேலும் தினகரனை நம்பி சென்ற 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை பறிகொடுத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்கள்.
இங்க பாருங்க.. நாங்களும்தான் இறக்கி விட்டோம்.. ஆனால் அந்த 2 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா
அதிமுக அழைப்பு
இந்நிலையில் சேர்ந்து இருக்கும் போது வென்ற அதிமுகவினர் மற்றும் அமமுகவினர், பிரிந்த சென்று பங்காளியாக சண்டை போட்டதால் தோற்றுப்போனதை உணர்ந்துவிட்டார்கள். இதனால் பாசம் கொண்ட தம்பிகளே ஓடிவாங்க... நேசம் கொண்ட ராசக்களே ஓடிவாங்க என தாய் கழகம்அதிமுக கூப்பிட்டு வருகிறது. இதனால் உடனே ஓடிப்போய் அமமுகவினர் இணைந்து வருகிறார்கள். இதன்படி இதுவரை இணைந்தவர்கள் பட்டியலை பார்த்தால் நிச்சயம் அமமுக கூடாரம் காலியாகி வருவதை உணர்த்தி உள்ளது. அந்த பட்டியல்களை இப்போது பார்த்துவிடலாம்.
அமமுகவினர் பட்டியல்
அமமுக திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் வி.முத்தையா, பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ எஸ்.மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜி.சின்னதுரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், பாளையங்கோட்டை பகுதி செலாளர் ஏ.அசன்ஜாபர்அலி, புளியங்குடி நகர செயலாளர் எம்.சங்கரபாண்டியன், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் எஸ்.சின்னபாண்டி, சங்கரன்கோவில் நகர பேரவை செயலாளர் கே.சேகர், சாம்பவார் வடகரை பேரூராட்சி செயலாளர் ஜி.காமராஜ் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
அமமுக நிர்வாகிகள்
இதேபோல் சங்கரன்கோவில் நகர செயலாளர் எஸ்.டி.சங்கரசுப்ரமணியன், செங்கோட்டை நகர செயலாளர்கள் யு.முத்தையா, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் ருசேவ், புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா பாலசுப்ரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்.மாரியப்பன், ஆகியோரும் நேற்று அதிமுகவில் இணைந்தனர். அதேபோன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுக சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன் (மாவட்ட பேரவை செயலாளர்), கே.ராஜாராம் (மாவட்ட இணை செயலாளர்), வி.அப்பாதுரை (ஒன்றிய செயலாளர்) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி நிர்வாகிகள்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த பூக்கடை எம்.முனுசாமி (தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர்), ஆர்.அசோக்குமார் (மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்) உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். மேற்கண்ட அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சென்னை இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர்.
ஈபிஎஸ்-ஒபிஎஸ் உறுதி
இன்னும் பல அமமுக முக்கிய தலைவர்கள் அதிமுகவில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் அதிமுகவில் இணைக்கும் பணியினை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் செய்து வருகிறார்கள். வரும் அனைவருக்கும் அதிமுகவில் உரிய மரியாதை அளிக்கப்படும் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் உறுதி அளித்துள்ளனர்.இதனால் உற்சாகமாக அமமுகவினர் அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் அமமுகவை இணைத்து அதிமுகவை வலிமையாக மாற்றி புதுத்தெம்புடன் தேர்தலை சந்திக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளனர்.