Exclusive: அதிமுகவில் இனிமேல் தான் கச்சேரியே உள்ளது... பொறுத்திருந்து பாருங்க... வெற்றிவேல் ஆருடம்
சென்னை: முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அதிமுகவை மையமாக வைத்து தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் நேற்று நடைபெற்ற காட்சிகள் அனைத்தும் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தின.
இந்நிலையில் அதிமுகவில் எழுந்துள்ள சலசலப்பு குறித்து அமமுக பொருளாளர் வெற்றிவேலின் கருத்தை அறிவதற்காக ஒன் இந்தியா தமிழ் சார்பாக அவரை தொடர்புகொண்டோம்.
அப்போது அவர் பேசியதாவது;
முட்டல் மோதல்
''அதிமுகவில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்ததற்கு காரணமே ஆட்சியும், அதிகாரமும் தான். அவை இரண்டும் முடியப்போகிறது என்பதால் மீண்டும் அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்படுதவற்கு ஒன்றுமில்லை, இப்படித்தான் நடக்கும் என எங்களுக்கு எப்போதோ தெரியும். இவர்கள் இருவருடைய தலைமையை ஏற்க அங்கு யாருக்கும் விருப்பமேயில்லை. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஒருவர் அதே ஆட்சியில் துணை முதல்வர் பதவியை வாங்கியிருக்கிறார்''.
தலைவலி உண்டு
''சின்னம்மா விடுதலையாகட்டும் அப்போது உள்ளது அவர்களுக்கு தலைவலி. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க என்ன நடக்குதுன்னு, தொண்டர்கள் எல்லோரும் சின்னம்மா பக்கம் வந்துவிடுவார்கள். இவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டதெல்லாம் கண்துடைப்பு, இதன் மூலம் தற்போதைய சூழலில் பிரச்சனைகளுக்கு கம்மா தான் போடப்பட்டுள்ளதே தவிர முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையேயான அதிகார மோதல் ஜென்மத்துக்கும் தீராது''.
அதிமுக தொண்டர்கள்
''ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகிய இருவராலும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அந்த ஆளுமை இல்லை. சின்னம்மாவிற்கும் தினகரனுக்கும் தான் தலைமை தாங்கக் கூடிய ஆளுமை உள்ளதாக அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் இப்போதே பேசத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் யாருடைய கட்டுப்பாட்டிற்கோ சென்று பல நாட்கள் ஆகிவிட்டன''.
கச்சேரி உண்டு
''அம்மா இருக்கும்போதே கட்சித் தேர்தலின் போது மாவட்டங்களில் பிரச்சனைகள் எழும். என்னை போன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு தெரியும். இப்போது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகிய இருவராலும் கட்சித் தேர்தலை நடத்தவே முடியாது. நான் உறுதியாக கூறுகிறேன். அதிமுக தலைமை மீது நிர்வாகிகளுக்கும், தொண்டனுக்கும் எந்த மரியாதையும் இல்லை பயமும் இல்லை. நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போலத் தான் இனி வரும் நாட்களில் காட்சிகள் அரங்கேறும். மொத்தத்தில் இனிமேல் தான் அதிமுகவில் கச்சேரி உள்ளது''.