தோத்துட்டோம்.. அதுக்காக வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கனுமா.. டிடிவி தினகரன் பளீச்!!
சென்னை: தேர்தலில் தோல்வியடைந்ததால் அமமுக ஒன்றும் அழிந்து போய்விடாது என அக்கட்சின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 17வது மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது.
இதேபோல் திமுக காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் கண்டது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிக்கள் தனித்து களம் கண்டன.
இரு தேர்தல்களிலும் வெற்றி
இந்த தேர்தலில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெற்றது. 38 மக்களவை தொகுதிகளில் 37 தொகுதிகளையும் 22 சட்டசபை தொகுதிகளில் 13 சட்டசபை தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
ஒரே ஒரு தொகுதி
ஆனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆளும் கட்சியான அதிமுக சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளையும் மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.
அமமுக பெரும் சரிவு
அதேநேரத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் கமலின் மக்கள் நீதிமய்யமும் பல இடங்களில் மாறி மாறி மூன்றாம் இடத்தை பிடித்தன. டிடிவி தினகரனின் அமமுக பெரும் சரிவை சந்தித்தது. இதனால் அக்கட்சியின் எதிர்காலம் முடிந்துவிட்டது என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன.
தினகரன் செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் அமமுக கட்சியின் கூட்டம் சென்னை அசோக் நகரில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, அதிமுகவும் திமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது வரலாறு. நான் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பல தேர்தல்களை பார்த்துள்ளேன். தோல்வி ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. பெரிய வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை.
ரூம்முக்குள்ளேயே கிடக்கனுமா?
அதற்காக அமமுக சோர்ந்துவிடாது. தேர்தலில் தோல்வியடைந்ததால் நாங்கள் அழிந்து போகப்போவதில்லை. தோல்வி அடைந்துவிட்டோம் என்பதற்காக வீட்டிற்குள்ளேயும் ரூம்மிற்குள்ளேயும் அடைந்து கிடக்க முடியுமா?
ஆலோசனை கூட்டம்
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசித்தோம். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்தோம். வேலூர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். 58 வேட்பாளர்களும் வந்திருந்தார்கள்.
தவறாக முடியும்
தமிழகத்தில் இந்தி திணிப்பு கூடாது. நீட் தேர்வு பொருளாதார ரீதியாகவும் சிளபஸ் ரீதியாகவும் தமிழக மக்களுக்கு கடினமானது. மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழகம் அதை எதிர்த்து வருகிறது. அதுபோல்தான் இந்தியும் கட்டாயப்படுத்தி திணித்தால் தவறாக முடியும். மக்கள் ஏற்க மாட்டார்கள். மத்திய அரசு இந்தி திணிப்பை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.