நான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா!
நெல்லையில் வருகிற 24ம் தேதி அமமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது
சென்னை: "ஆமாம்.. நான் அம்மாவின் குட்டிதான்.. அம்மா எட்டடி பாய்ந்தால்... நான் 16 அடி இல்லை.. 16 ஆயிரம் அடி பாயும் குட்டி" என்று உரத்த குரல் கொடுத்து வரும் டிடிவி தினகரன்.. வருகிற 24-ம் தேதி நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.. இது அதிமுக உள்ளிட்ட அரசியல் வட்டாரத்தில் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
கடந்த எம்பி தேர்தல் ஆகட்டும், இடைத்தேர்தல் ஆகட்டும்.. அந்த முடிவுகளின் போது காணாமல் போய்விடுவார் என்று விமர்சிக்கப்பட்டவர்தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.. ஆனால், இப்போது அமமுகதான் தமிழகத்தின் 3-வது இடத்தில் மிகப்பெரிய உருவெடுத்துள்ளது.
ஆர்கே நகர் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போனது டிடிவி தினகரனால்.. உட்கட்சி பூசல், கட்சி தாவல், வழக்கு பிரச்சனை, சின்னம் விவகாரம் என பல இடையூறுகளில் சிக்கியது.. ஆனால் எத்தனை இடையூறுகள், தடைகள், ஏன் முதுகில் குத்தும் துரோகிகளை சந்தித்தபோதிலும் இன்றுவரை அசராமல் இருக்கிறார் டிடிவி தினகரன்.
உள்ளாட்சி தேர்தல்
முதல்வேலையாக, அமமுகவை கட்சியாக பதிவு செய்வது என முடிவு செய்தார்.. அதன்படியே முறைப்படி பதிந்து உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிட்டார். ஊராட்சி ஒன்றியங்கள், ஒன்றிய சேர்மன், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் எண்ணிக்கையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக வந்து 3வது இடத்தை தக்க வைத்தார் தினகரன். இது சோர்ந்து போயிருந்த அக்கட்சியினரிடையே மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது.. இந்த வெற்றியை கண்டு அப்போதே அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தாகவும் சொல்லப்பட்டது.
களப்பணி
இதற்கெல்லாம் காரணம் டிடிவி தினகரனின் பொறுமையும், எப்பேர்ப்பட்ட பிரச்சனை வந்தாலும் டென்ஷன் ஆகாமல், அதை கையாளும் விதம்தான் என்கிறார்கள் அமமுக தொண்டர்கள்.. சத்தமில்லாமல் செய்து வரும் களப்பணிதான் தினகரனின் வெற்றிக்கு காரணமாக அமைந்து வருகிறது என்றும் சொல்கிறார்கள். இன்றுவரை இவர் "கூல் தலைவர்" என்றே தொண்டர்களால் கருதப்படுகிறார்.. இந்நிலையில், வருகிற 24ம் தேதி, அதாவது நாளை மறுநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.
அனுமதி
அதிமுக தரப்பில் வழக்கம்போல் இதை அமர்க்களப்படுத்துவார்கள்.. எனினும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று ஜெயலலிதா 72வது பிறந்தநாளை அமமுகவினர் கொண்டாட தயாராகி வருகின்றனர். நாளை மறுநாள் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இதற்கான முறைப்படி அனுமதியும் ஐகோர்ட் கிளை அளித்துள்ளது.
மாநாடு
கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த பொதுக்கூட்டத்தில் அன்று மாலை உரையாற்ற உள்ளார். அநேகமாக வரும் சட்டசபை தேர்தலுக்கான அமமுகவின் செயல்பாடுகள், திட்டங்களை தினகரன் இந்த மாநாட்டில் வெளிப்படுத்துவார் என தெரிகிறது. இந்த விழாவுக்காக மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அமமுகவினர். தமிழகம் முழுவதுலுமிருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களைக் குவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம்.
தொண்டர்கள்
சட்டசபைத் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் இந்த பொதுக் கூட்டத்தை வைத்து மாஸ் காட்ட அமமுகவினர் முடிவு செய்துள்ளதால், கட்சியினர் படுகுஷியிலும், மிகுந்த எதிர்பார்ப்பிலும் உள்ளனர்... அதேசமயம் இது அதிமுகவுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளதாம். அதிமுகவின் கொண்டாட்டத்தை தினகரனின் பொதுக் கூட்ட விழா ஓவர் டேக் செய்தால் தொண்டர்கள் மத்தியில் பெரும் தர்மசங்கடமாக போய் விடுமே என்று அக்கட்சியினர் கையைப் பிசைந்து கொண்டுள்ளனராம்.