ஆம்பன் தொடக்கம்தான்.. இன்னும் பல சூப்பர் புயல் சீக்கிரம் வரும்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னணி
சென்னை: ஆம்பன் புயல் போலவே எதிர்காலத்தில் நிறைய வலிமையான சூப்பர் புயல்கள் ஏற்படலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஆம்பன் புயலை எதிர்கொள்ள ஒடிசாவும், மேற்கு வங்கமும் தீவிரமாக தயாராகி வருகிறது. அங்கு இந்த புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். ஆம்பன் புயல் தற்போது அதி தீவிர சூப்பர் புயலாக மாறியுள்ளது.
இன்று இந்த புயல் கரையை கடக்கும். ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் இருந்து இந்த புயல் 520 கிமீ தூரத்தில் இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே ஆம்பன் புயல் கரையை கடக்கிறது.
கடலில் ஏற்பட்ட மாற்றம்.. 18 மணி நேரத்தில் எல்லாம் மாறியது.. ஆம்பன்
வலிமை பெற்றது
இந்த நிலையில் அந்த ஆம்பன் புயல் கடலின் மேற்பரப்பில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே அதிக வலிமை பெற்றுள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது வங்க கடலின் மேற்பரப்பில் அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆம்பன் புயல் வலிமை பெற்றுள்ளது. இதுதான் ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாற காரணம். வங்க கடலின் மேற்பரப்பில் 32-33 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்காலம்
இந்த நிலையில் இதேபோல் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக சூப்பர் புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி முன்னணி வானிலை ஆராய்ச்சியாளர் சவுமியா தத்தா இதுகுறித்து கூறுகையில், உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்திய பெருங்கடல், வங்க கடலில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு உருவாகும் புயல்கள் அதிக வலிமை பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
வேகத்தை அதிகரிக்கும்
பொதுவாக ஒரு புயல் உருவாகும் போது அது அதிக வலிமையுடன் இருக்காது. ஆனால் கடலுக்கு மேல் இருக்கும் வெப்பநிலை மற்றும் ஆவியான நீர் ஆகியவை இந்த புயலின் வலிமையை தீர்மானிக்கும். இதுதான் புயலின் வேகத்தை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகம் ஆக ஆக இந்த புயலின் வேகமும் அதிகம் ஆகும். தற்போது ஆம்பன் புயல் வேகம் எடுக்க காரணமே வங்க கடலில் உருவான அதிக வெப்பநிலைதான். இதேபோல் வரும் காலத்தில் நிறைய சூப்பர் புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது.
வங்க கடல் சூடாகி வருகிறது
இது தொடர்பாக உட்டா மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானி சிமோன் வாங் கூறுகையில், இந்திய பெருங்கடல், வங்க கடல் தற்போது வேகமாக சூடாகி வருகிறது. இனி அங்கு புயல்கள் உருவானால் அது சூப்பர் புயலாக மாற வாய்ப்புள்ளது. கடந்த வருடமே இதற்கான அறிகுறிகள் ஏற்பட்டது. கடல் நாளுக்கு நாள் அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது. இதுதான் புயலின் வலிமையை அதிகரிக்கும்.
ஆம்பன் தொடக்கம்தான்
இதனால் இந்தியாவில் வரும் நாட்களில் அதிகமாக சூப்பர் புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். ஆம்பன் சூப்பர் புயல் வெறும் தொடக்கம்தான் என்று கூறுகிறார்கள். வரும் நாட்களில் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுக்க நிறைய சூப்பர் புயல்கள் வர வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.